சவுதி அரேபியாவில் இன்று (நவம்பர் 17) அதிகாலை டீசல் டேங்கர் மீது பேருந்து மோதிய விபத்தில் 42 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் மிக முக்கியமான இஸ்லாமிய புனித நகரம் மதீனா. மெக்காவுக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்களுக்கு மிகவும் புனிதமான இடமாக கருதப்படும் மதீனாவுக்கு அருகே உம்ரா புனித பயணம் சென்றவர்களின் பேருந்து ஒன்று பயணித்தது. அதில் இந்தியாவில் இருந்து புனித பயணம் மேற்கொண்டவர்களும் இருந்தனர். அதிகாலை 1.30 மணியளவில் எதிர்பாராத விதமாக உம்ரா பயணம் சென்றவர்கள் இருந்த பேருந்து டீசல் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சேதம் அடைந்துள்ளது. இதில் பயணித்த இந்தியர்கள் 42 பேர் பலியாகி உள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த பேருந்தில் பயணித்த பெரும்பாலானவர்கள் இந்தியாவிலிருந்து சென்ற தெலுங்கானா மற்றும் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
பேருந்தில் பயணித்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த விபத்தில் இந்தியர்கள்42 பேர் பலியாகி உள்ளதாகவும், இந்த விபத்தில் ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் 20 பேர் பெண்கள் என்றும், 11 பேர் குழந்தைகள் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
