இளைஞர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மோடி

Published On:

| By admin

நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது அரிதாகிவிட்டது. படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல், கிடைக்கும் வேலையை குடும்ப சூழ்நிலை காரணமாக பார்த்து வருகின்றனர். பட்டதாரி இளைஞர்கள் வேலை கிடைக்காமல் துப்புரவு பணிகளுக்கு சென்றதும் நடந்திருக்கிறது.

ADVERTISEMENT

இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய தரவுகள் படி, கடந்த மார்ச் மாதத்தில் 7.60 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 7.83 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது மே மாதத்தில் 7.12ஆக குறைந்துள்ளது.

எனினும் இது பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டைக் காட்டிலும் அதிகமாகும், 2014ல் 5.60 சதவிகிதமாக வேலைவாய்ப்பின்மை இருந்தது. அப்போது பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு மாறாக வேலையின்மை அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இதைக் குறிப்பிட்டு தற்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சூழலில் ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை நிரப்பிட பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

“அனைத்து மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் உள்ள காலியிடங்கள் தொடர்பாக ஆய்வு செய்து, அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்” என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மார்ச் 1, 2020 நிலவரத்தின் படி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 8.72 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது என்று நாடாளுமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share