மாநிலங்களுக்கான 41 சதவிகித வரிப் பகிர்வு தொடரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் 2026 – 27-ஐ நாடாளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்து பேசிய மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநிலங்களுக்கான வரி பகிர்வு 41 சதவிகிதமாக தொடர வேண்டுமென்ற நிதிக்குழுவின் பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது ஊரக, நகர்ப்புற உள்ளாட்சிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை மானியங்களை உள்ளடக்கியதாகும் என்று கூறினார்.
அந்த வகையில் மாநிலங்களுக்கு ரூ 1.40 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால் தமிழ்நாடு கேட்டது 50 சதவிகித வரி பகிர்வு.
கடந்த 15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க கூடிய வரி வருவாய் பங்கினை 41 சதவிகிதமாக உயர்த்திய போது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ‘ ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான வரி பகிர்வு பங்கு 50 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும். அப்போதுதான், மாநிலங்கள் தங்களது தேவைகளுக்கு ஏற்ப, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி நிதி மேலாண்மையில் உரிய சுயாட்சியுடன் செயல்பட முடியும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்தசூழலில் 41 சதவிகித வரி பகிர்வே தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது.
