மெட்ரோ கோரிக்கைக்காக பாராளுமன்றத்தை முடக்குங்கள் அதுதான் தான் சரியாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் அக்கட்சியின் பூத் கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் கொறடாவும் முன்னாள் அமைச்சருமான வேலுமணி கலந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை, மதுரையில் மெட்ரே திட்டங்களை மத்திய அரசு ரத்து செய்தது குறித்து பேசுகையில், “மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விளக்கம் கேட்டால் அதை நிவர்த்தி செய்து அனுப்பிட வேண்டும். கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் வலியுறுத்தி இருக்கிறார்.
2026 ல் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வந்தவுடன் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும். எடப்பாடி பழனிசாமி அறிவித்த மெட்ரோ ரயில் திட்டம், மீண்டும் அவர் முதல்வரானவுடன் கொண்டு வரப்படும்.
பிரதமரிடம் தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை எடப்பாடி பழனிசாமி வழங்கி இருக்கின்றார். திமுக ஆட்சியில் எந்த திட்டமும் செயல் படுத்தபடவில்லை, விடுபட்ட திட்டங்களை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கொண்டுவரப்படும்.
மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என நாங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தோம், அதை ஏற்று அவர் திட்டத்தை அறிவித்தார். ஆரம்பகட்ட பணிக்கு 3 கோடி அறிவித்தார். தற்பொழுது இரண்டு வழித்தடங்களில் மட்டும் மெட்ரோ ரயில் என திட்டமிட்டு இருக்கின்றனர்.
ஆனால் மெட்ரோ எல்லா வழித்தடங்களிலும் கொண்டு வர வேண்டும். மெட்ரோ தொடர்பாக விளக்கம் கேட்டு எந்த பைல் சென்றாலும், அதை சரி செய்து அவர்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.மத்திய அரசில் இருந்து கேள்வி கேட்பார்கள், விளக்கம் கேட்பார்கள், அதை சரி செய்து பதில் சொல்லி மெட்ரோ திட்டத்தை கேட்டு வாங்க வேண்டும் என்றார்.
மேலும் திமுகவில் 40 எம்பிக்கள் இருக்கிறார்கள் அவர்கள்தான் திட்டத்தை கேட்டு வாங்க வேண்டும். அதை விட்டுவிட்டு இங்கு போராட்டம் செய்தால் எப்படி சரியாக இருக்கும் என கேள்வி எழுப்பினார்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை கொடுத்தது நீங்கள் செய்தது தவறு , சரியான மக்கள் தொகையினை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். மெட்ரோ கோரிக்கைக்காக பாராளுமன்றத்தை முடக்குங்கள் அதுதான் தான் சரியாக இருக்கும். எடப்பாடியாரும் அதைத்தான் சொல்கிறார்” என தெரிவித்தார்.
