கோவையில் நான்கரை வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் முறையற்ற உறவுக்கு குழந்தை இடைஞ்சலாக இருப்பதாக கருதி தாயே கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 4 year old child died by her mother
கோவை சிங்காநல்லூரை அடுத்த இருகூர் பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (35). இவரது மனைவி தமிழரசி (30). இவர்களுக்கு நான்கு வயதில் பெண் குழந்தை இருந்தது.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் ரகுபதியை பிரிந்த தமிழரசி குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். இவர் கட்டட வேலைக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் குழந்தை திடீரென வாந்தியெடுத்தாகவும் உடனடியாக மயக்கம் அடைந்ததாகவும் கூறி 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அரசு மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் குழந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தமிழரசியின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிங்காநல்லூர் போலீசார் தமிழரசியை அழைத்து சென்று குழந்தையின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தமிழரசி வேலை செய்யும் இடத்தில் வசந்த என்பவருடன் சில மாதங்களாக முறையற்ற உறவில் இருந்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. தனது முறையற்ற உறவிற்கு குழந்தை இடைஞ்சலாக இருந்ததால் குழந்தையை தமிழரசியே கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து குழந்தையின் உயிரிழப்பை சந்தேக மரணம் என்று போலீசார் பதிவு செய்தனர். மேலும் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொள்ள காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
தாயின் திருமணத்திற்கு புறம்பான உறவால் நான்கரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இருகூர் பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
