ஆற்றில் மூழ்கி மாணவிகள் பலியான விவகாரம்: ஆசிரியர் கைது!

Published On:

| By Monisha

காவிரி ஆற்றில் சிக்கி 4 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்த விவகாரத்தில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பிலிப்பூர் அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 18 மாணவிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளச் சென்றிருந்தனர்.

விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தவுடன் புதுக்கோட்டை மாவட்டத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மாயனூர் கதவணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதில் ஒரு மாணவி ஆற்றில் சுழல் இருந்ததைக் கவனிக்காமல் நீரில் இறங்கியதில் அடித்துச் செல்லப்பட்டார். இதை கண்ட உடன் வந்த 3 மாணவிகள் அவரை காப்பாற்ற ஆற்றில் இறங்கியதில் அவர்களும் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதனைக் கண்டு மற்ற மாணவிகள் கூச்சலிட்டதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் வந்து காப்பாற்ற முயற்சித்தும், மாணவிகளை காப்பாற்ற இயலவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்புத் துறையினரின் 2 மணி நேர தேடலுக்குப் பிறகு தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் சடலமாக மீட்கப்பட்டனர்.

ஆழமான பகுதி என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தும், அதை மாணவிகள் கவனிக்காமல் இறங்கியதால் தான் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்தாக கூறப்படுகிறது.

ஆழமான பகுதியில் மாணவிகளை ஆசிரியர்கள் அழைத்துச் சென்றது தான் இந்த துயரமான சம்பவத்திற்குக் காரணம் என்று உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதுமட்டுமின்றி மாணவிகள் பயின்று வந்த பள்ளிக்கு சென்று ஆசிரியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பிரேதப் பரிசோதனைக்காகக் கரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மாணவிகளின் உடலை வாங்கவும் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4 students died in kaveri

இந்த சம்பவம் தொடர்பாக, பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பொட்டுமணி, இடைநிலை ஆசிரியர் ஜெபசாய இப்ராஹிம், ஆசிரியர் திலகவதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இடைநிலை ஆசிரியரான ஜெபசாய இப்ராஹிம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

பிபிசி அலுவலகங்கள்: மூன்றாவது நாளாக சோதனை!

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஹால் டிக்கெட் வெளியீடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share