மிகப்பெரிய நட்சத்திரங்கள் யாரும் இல்லாமல் ரூபாய் ஐந்து கோடி செலவில் எடுக்கப்பட்டு ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படம் ‘சாய்ராத்’. வசூல் என்பதை தாண்டி ஆணவக்கொலையை மையமாக வைத்து மத அடிப்படைவாதத்தையும், சமகால சாதிய சமூகத்தின் கோர முகத்தையும் வெளிப்படுத்திய படம் இது. இந்த தைரியமான முயற்சியின் காரணமாகவே இப்போது அரங்கு நிறைந்த காட்சிகளாக ‘சாய்ராத்’ ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஹிட் படத்தை ரீமேக் செய்யும் வழக்கமான பாணியில் இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழியில் ரீமேக் செய்வதற்கான உரிமையை ராக்லைன் வெங்கடேஷ் வாங்கியுள்ளார்.
‘சாய்ராத்’ படத்தின் தயாரிப்பாளர்களுடன் இணைந்து இந்த ரீமேக் படங்களைத் தயாரிக்க இருப்பதாக ராக்லைன் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். விரைவில் இயக்குநர், நடிகர், நடிகையர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மராத்தியில் சாதியைக் குறிப்பிட்டு அதன் அவலத்தை கலைத்தன்மையுடன் வெளிப்படுத்திய ‘சாய்ராத்’ படத்தை அந்த அளவுக்கு தைரியமாகத் தமிழில் எடுக்க முடியுமா? எடுத்தாலும் 3 ஆண்டுகளில் 80-க்கும் மேற்பட்ட ஆணவக்கொலைகள் நடந்துள்ள தமிழ்நாட்டில், அதை விமர்சிக்கும் ஒரு படத்தை ரிலீஸ் செய்ய முடியுமா? என்பதுமே நம்முன் நிற்கும் கேள்விகள்.
