காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வருவதையே லட்சோப லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோஹில் கூறினார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வியை அடுத்து அக்கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆகஸ்ட் 10ஆம் தேதி இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். சோனியா இடைக்காலத் தலைவராகப் பதவியேற்று ஒரு வருடம் முடிந்துவிட்ட நிலையில், அடுத்த தலைவர் ராகுல் என்ற குரல்கள் காங்கிரஸில் எழுந்தன.
இந்த நிலையில் கடந்த வாரம் வெளிவந்த பிரதீப் சிபர் மற்றும் ஹர்ஷ் ஷா ஆகியோரால் எழுதப்பட்ட ‘இந்தியா நாளை: அரசியல் தலைவர்களின் அடுத்த தலைமுறையினருடனான உரையாடல்கள்’ என்ற புத்தகத்தின் ஒரு பகுதியை வைத்து, பிரியங்கா காந்தியின் ஒரு கருத்து நேற்று ஆங்கில மீடியாக்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதாவது, ‘நேரு குடும்பம் அல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வருவதை ராகுலைப் போலவே நானும் விரும்புகிறேன்’ என்று பிரியங்கா காந்தி கூறியதை மேற்கோள்காட்டிதான் நேற்று பல ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதற்குப் பதிலளித்த காங்கிரஸ் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா “பிரியங்கா காந்தி 2019 ஜூலை 1ஆம் தேதி வெளியிட்ட கருத்தை இப்போது எடுத்து வைத்துக்கொண்டு விவாதிக்கும் ஊடகங்கள்… இன்றைய சூழலில், மோடி – ஷா கூட்டணியால் இந்தியாவின் அரசியல் மீதான கொடூரமான தாக்குதலை அல்லவா விவாதிக்க வேண்டும். மோடி அரசாங்கத்தின் பின்னடைவுகள் மற்றும் மோசமான தாக்குதல்களை எதிர்த்து அச்சமின்றி, ராகுல் காந்தி அயராது போராட்டத்தை வழிநடத்தியதை பல லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் தலைவர்களும் கண்டிருக்கிறார்கள். இந்த அச்சமின்மை மற்றும் சமரசமற்ற தைரியம்தான் காங்கிரஸுக்கு இப்போதைய தேவை” என்று குறிப்பிட்டார்.
பிரியங்காவின் கருத்துகள் குறித்து கேட்டதற்கு, கட்சியின் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோஹில் ஏ.ஐ.சி.சி பத்திரிகையாளர் சந்திப்பில் “ஆமாம் அவருக்கு அப்போதைய கருத்து இருந்தது, ஒரு வருடம் முன்பு , 2019 ஜூலை 1 அன்று பிரியங்கா காந்தி அவ்வாறு கூறினார். இது ராகுல் காந்தியின் கருத்தாகவும் இருந்தது. ஆனால் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் இன்று, ராகுல் காந்திதான் எங்களை வழிநடத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். எவ்வாறாயினும், இதுபோன்ற விஷயங்களில் காங்கிரஸ் செயற்குழு விரைவில் முடிவெடுக்கும்” என்றார்.
**-வேந்தன்**�,