ஸ்டாலின் உள்ளிட்டோர் மீதான சட்டமன்ற உரிமை மீறல் வழக்கின் இறுதி விசாரணை வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக குட்கா, பான் மசாலா விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏ.க்கள் 2017 ஜூன் மாதம் சட்டமன்றத்திற்கு குட்காவை கொண்டு சென்றனர். இதுகுறித்து பேச அனுமதி மறுத்த சபாநாயகர் தனபால், ஸ்டாலின் குட்கா எடுத்து வந்த விவகாரத்தை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்தார். இதுபற்றி விளக்கம் கோரி 21 பேருக்கும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
உரிமை மீறல் குழுவின் நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017 செப்டம்பர் மாதம் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை 21 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் நேற்று (ஜூலை 11) முறையிட்டனர். அதில், “ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. ஆகவே, வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.
அப்போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், என்.ஆர்.இளங்கோ, “ 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் உச்சநீதிமன்றம் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத அதிமுக அரசு, உயர் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட வழக்கை விரைந்து எடுத்து விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்கிறது. வழக்கை சந்திக்க திமுக எப்போதுமே தயாராக இருக்கிறது” என்று தெரிவித்தனர்.
இதையடுத்து வழக்கு இறுதி விசாரணையை ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று விசாரிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
**எழில்**�,