3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் தபால் அலுவலகம் பெங்களூருவில் இன்று (ஆகஸ்ட் 18) திறக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் என்பது அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. அந்த வகையில் கட்டுமான பணிகளிலும் தொழில்நுட்பம் வளர தொடங்கிவிட்டது.
பெங்களூருவின் உல்சூர் பசார் அருகே உள்ள கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் 3டி பிரின்ட்டெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதல் தபால் நிலையம் கட்டப்பட்டுள்ளது. 1100 சதுர அடி பரப்பளவில் இந்த தபால் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
தபால் நிலையத்தை இன்று மத்திய ரயில்வே, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார்.
தபால் நிலையத்தை திறந்து வைத்து பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “3டி தொழில்நுட்பத்தில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்த 3டி தொழில்நுட்பத்தின் மூலம் நாம் இந்தியாவின் புதிய பரிமாணத்தைப் பார்க்கிறோம். இது பெருமைமிகு தருணம்” என்று பேசினார்.
Every Indian would be proud to see India's first 3D printed Post Office at Cambridge Layout, Bengaluru. A testament to our nation's innovation and progress, it also embodies the spirit of a self-reliant India. Compliments to those who have worked hard in ensuring the Post… pic.twitter.com/Y4TrW4nEhZ
— Narendra Modi (@narendramodi) August 18, 2023
3டி பிரின்ட்டெட் தபால் நிலையம் குறித்து பிரதமர் மோடி, “பெங்களூருவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் முதல் 3டி பிரின்ட்டெட் தபால் நிலையத்தைப் பார்ப்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுவார்கள்.
இது இந்தியாவின் புதுமைக்கும் முன்னேற்றத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு. தற்சார்பு இந்தியாவின் அடையாளம். இந்தக் கட்டுமானத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்” என்று அவருடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் 3டி பிரின்டிங் வீடு, சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டு கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா