விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் செல்ல 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
பண்டிகை தினத்தில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் அதை காரணம் காட்டி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை ஒரேயடியாக உயர்த்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.
அந்தவகையில் விநாயகர் சதுர்த்தி நாளை (ஆகஸ்ட் 31) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல கட்டணத்தை உயர்த்தியுள்ளன.
வழக்கமாக சென்னையிலிருந்து திருச்சிக்கு அதிகபட்சம் 800 வரை வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 1900 ரூபாய் வரை அதிக பட்ச கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

கோவைக்கு 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது அதிகபட்சமாக 2500 வரை விற்பனை செய்யப்படுகிறது, மதுரை மற்றும் நெல்லைக்கு வழக்கமாக 1400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 2500 வரை விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்த நிலையிலும் இது தொடர்ந்து வருகிறது.
இந்தநிலையில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் முன்பதிவு செய்து தங்கள் ஊர்களுக்கு செல்லவும், அங்கிருந்து பயணிகள் திரும்பவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கலை.ரா
அமைச்சர் எச்சரிக்கைக்குப் பின்னும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்!
