மழலையர் பள்ளியில் மூடப்படாத தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 year old child felldown in water tank and died at kindergarden
மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் தனியார் மழலையர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
வழக்கம்போல இன்று (ஏப்ரல் 29) காலை பள்ளி செயல்பட்ட நிலையில், அங்கு பயின்று வரும் 3 வயது குழந்தை ஆரூத்ரா பள்ளியின் பின்புறம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்த 12 அடி ஆழமுள்ள மூடப்படாத தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்தது. இதனையடுத்து உயிருக்கு போராடிய குழந்தையைக் கண்ட பள்ளி ஊழியர்கள் உடனடியாக மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பந்தப்பட்ட மழலையர் பள்ளிக்கு மதுரை மாநகர தெற்கு ஆணையர் தலைமையில் தல்லாக்குளம் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பள்ளியின் உரிமையாளர் திவ்யாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் மழலையர் பள்ளிகள் செயல்படக்கூடாது. குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் வசதிகள் இன்றி இயங்கக் கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஏற்கெனவே மின்னம்பலம்.காம் தளத்தில் ‘உயர்நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் மழலையர் பள்ளி… பிஞ்சு குழந்தைகளை காப்பாற்றுமா தமிழக அரசு?’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் மதுரையில் குடியிருப்பு பகுதியில் இயங்கி வந்த மழலையர் பள்ளியில் மூடப்படாத தண்ணீர் தொட்டியில் 3 வயது குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
