ஸ்ரீபெரும்புதூரில் தனியார் விடுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சத்தியம் கிராண்ட் ரிசார்ட் செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள கழிவுநீர் தொட்டியை இன்று(அக்டோபர் 21) சுத்தம் செய்வதற்காக ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த நவீன்குமார்(30), திருமலை(18), ரங்கநாதன்(51) ஆகியோர் இறங்கியிருக்கின்றனர்.
அப்போது விஷவாயு தாக்கி 3 பேரும் மயங்கி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்திருக்கின்றனர்.
அவர்கள் அணிந்து வந்த ஆடைகள் தொட்டிக்கு வெளியே இருப்பதை பார்த்த சிலர் உள்ளே எட்டிப் பார்த்தபோதுதான் 3 பேரும் மயங்கி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு படை உதவி மாவட்ட அலுவலர் சக்திவேல் தலைமையில் 10 க்கும் மேற்பட்டோர் மயங்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் இறங்கினர்.
ஆனால் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் தொட்டி நிரம்பி இருந்ததால் அவர்களை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து 3 பேரின் உடல்களையும் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மூன்று பேர் பலியான சம்பவத்தில் ஒப்பந்ததாரர் ரஜினி வெங்காடு, தனியார் விடுதி மேலாளர் சுரேஷ்குமார், உரிமையாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது ஏற்படும் இறப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மனிதகழிவுகளை மனிதர்களே அள்ளுவதா என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 20 ஆம் தேதி சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனி நபரை நியமித்து சுத்தம் செய்யும்போது மரணம் ஏற்பட்டால் இழப்பீடாக ரூ.15 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மேலும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனிநபர் நியமிக்கப்படுவதை மக்கள் அறிந்தால் 14420 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்தது.
இந்தநிலையில் ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலை.ரா
தொடரும் விபத்து: அருணாச்சலில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்!
தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு இந்திய கடற்படை உத்தரவு!
