அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் தொடர்புடைய பவாரியா கொள்ளையர்கள் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதி அதிகாலை 2:45 மணி அளவில் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ-வாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த சுதர்சனம் பெரியபாளையம் அருகே தானாங்குளத்தில் உள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளை கும்பல் சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். மேலும் அவரது மனைவி, மகன்களை தாக்கி விட்டு 62 சவரன் நகைகளை கொள்ளையடித்து பின்னர் அங்கிருந்து தப்பி ஓடினர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஐஜி ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவு பிறப்பித்தார்.
இந்த கொலை வழக்கில் ஹரியானா மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து ஹரியானாவைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், ஜெகதீஷ், ராகேஷ், அசோக், ஜெயில்தர் சிங் உள்ளிட்ட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதில் சிறையில் இருந்த ஓம்பிரகாஷ் உள்ளிட்ட இரண்டு பேர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர். ஜாமீன் பெற்ற மூன்று பெண்கள் தலைமறைவாகினர்.
இதையடுத்து மற்ற நான்கு பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை 15வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி எல்.ஆப்ரஹாம் லிங்கன் உத்தரவிட்டார். ஜெயில்தர் சிங் குறித்து வரும் 24 ஆம் தேதி உத்தரவிடப்படும் என தெரிவித்தார்.
தீர்ப்பு விபரம்
இந்த வழக்கில் இன்று தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டது. ஓம் பிரகாஷ், ஜெகதீஷ் மற்றும் ராகேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதி, ஜெயில்தர் சிங்கை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
