தந்தத்துக்காக யானையை வேட்டையாடி எரித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் நெருப்பூர், ஏரியூர், நாகமரை, ஒகேனக்கல் காட்டுப்பகுதிகள் சுமார் 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. இது கர்நாடக மாநிலம், காவிரி வன உயிரியல் பாதுகாப்பு மண்டலத்தை ஒட்டி அமைந்துள்ளது.
இந்தக் காட்டுப்பகுதியில் ஏராளமான யானைகள், காட்டெருமை, புள்ளிமான்கள், கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்கின்றன. 3 Arrested for Hunting Elephant
கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இரவு, மூலபெல்லூர் வனப்பகுதியில் உள்ள கோடுபாவி என்ற இடத்தில், 12 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் யானை எரிந்த நிலையில் இறந்து கிடந்தது.
இதுகுறித்து மாவட்ட வனச்சரக அலுவலர் ராஜாங்கம் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது, எப்போதும் யானைகள் கூட்டமாகத்தான் வந்து செல்லும், ஆனால் இந்த யானை தனியாக வந்து சென்றிருக்கிறது. இதை ஒரு மாதமாக கண்காணித்து வந்த மான்களை வேட்டையாடக்கூடியவர்கள், கடந்த மாதம் 27ஆம் தேதி மாலை நேரத்தில் தண்ணீர் குடிக்க வந்த யானையை சுட்டுள்ளனர்.
ஒளி கூடு எனப்படும் மறைவிடத்தை அமைத்து, மறைந்திருந்து யானை வரும் போது அதன் நெற்றியில் சுட்டுள்ளனர். இதில் சுருண்டு விழுந்த யானை சற்று நேரத்தில் இறந்துவிட்டது. இதையடுத்து இறந்த யானைக்கு பத்தி, கற்பூரம், பழம் ஆகியவற்றை வைத்து பூஜை செய்து,
தந்தத்தை வெட்டி எடுக்க தயாராகும் போது, அங்கு மற்ற யானைகள் கூட்டமாக வந்துள்ளது.
இந்நிலையில் இறந்து கிடக்கும் யானையை பார்த்தால் மற்ற யானைகள் செல்லாமல் அங்கேயே நின்றுவிடும் என்பதால் அங்கிருந்த சருகு மட்டை, விறகுகளை எல்லாம் சேர்த்து இறந்து கிடந்த யானைக்கு அருகில் தீ வைத்தனர். இதை பார்த்த மற்ற யானைகள் திரும்பி ஓடிவிட்டன.
அப்போது மணி மாலை 6க்கு மேல் ஆனதால் இருள் சூழ்ந்துவிட்டது. இதனால் வெளிச்சத்துக்காக யானைக்கு பின்புறம் உடலில் தீ வைத்து எரித்தனர். அந்த வெளிச்சத்தில் யானையின் தலைபகுதியில் வாயை வெட்டி தந்தத்தை எடுத்துக்கொண்டு இரவோடு இரவாக தப்பிவிட்டனர்.

மறுநாள் 28ஆம் தேதி அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆடுமாடுகளை ஓட்டி வந்துள்ளனர். அவர்கள் யானை எரிந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து வனத்துறை மாவட்ட அதிகாரி ராஜாங்கம் உத்தரவின் பேரில் ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து வனத்துறையும், காவல்துறையும் இணைந்து ஐந்து குழுக்களாக பிரிந்து குற்றம் செய்தவர்களை தேடி வந்தனர்.
அந்த பகுதியில் ஆடுகள், மாடுகளை மேய்ச்சலுக்காகக் காடுகளுக்கு ஓட்டி சென்று வரும் நபர்கள், அடிக்கடி வெளியூருக்கு சென்று வருவோர்களின் செல்போன் எண்களை கண்காணித்து போலீசார் ஆய்வு செய்தனர். ஸ்பாட்டுக்கு சென்று ஆய்வு செய்ததில், அங்கு பூஜை பொருட்கள், பிஸ்கட், பன் உள்ளிட்ட தின்பண்டங்கள் கிடந்தன.
அதன் கவரில் இருந்த முகவரியை ஆராய்ந்தபோது, தமிழக எல்லையில் உள்ள செங்கப்பாடி எனும் கோபிநத்தம் ஊரில், ஒரு மளிகை கடையில் வாங்கியது என தெரியவந்தது. அந்த கடைக்காரர் உட்பட சந்தேகத்திற்கிடமான சுமார் 50 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 3 Arrested for Hunting Elephant
அப்போதுதான் தந்தத்தை வெட்டியவர்கள் பாவனியில் இருக்கும் தினேஷ் என்பவரை சந்தித்து தந்தத்தை விற்பனை செய்ய முயற்சி செய்து வருவதையும், செல்போனில் உரையாடுவதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
இதில் தினேஷ் யார் என்று ஆராய்ந்ததில் அவர் கர்நாடக – தமிழக எல்லை பகுதியான கோபிநத்தம் அருகில் உள்ள புதூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
தினேஷை கைது செய்த பெண்ணாகரம் வனத்துறை அலுவலர்கள், அவர் மேட்டூர் அருகில் உள்ள லக்கம்பட்டி காட்டுப் பகுதியில் புதைத்து வைத்திருந்த ஆறு கிலோ எடை கொண்ட யானைத் தந்தங்களை கைப்பற்றினர். 3 Arrested for Hunting Elephant
அந்தத் தந்தங்கள் இரண்டும் காட்டுப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆண் யானையிலிருந்து எடுக்கப்பட்டவைதான் என்பதை உறுதி செய்த பின், யானையை சுட்டுக்கொன்றது யார் என்பது குறித்து விசாரணை செய்தனர்.
இதில், கொங்குருப்பட்டி ஊரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் செந்தில் (24), செந்திலின் உறவினரான விஜயகுமார் இருவரும்தான் யானையை கொன்று தந்தத்தை வெட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. 3 Arrested for Hunting Elephant

இந்நிலையில் கைது செய்யப்பட்ட தினேஷ், செந்தில், விஜயகுமார் மற்றும் கோவிந்தராஜ் ஆகிய நால்வரிடமும் போலீசார் விசாரித்தனர். 3 Arrested for Hunting Elephant
இதில் விஜயகுமார் போலீசிடம் கூறுகையில், “நாங்கள் பாரில் மது குடித்துக் கொண்டிருந்தோம். அப்போது தான் தினேஷ் எங்களிடம், ’கேரளாவில் தனக்கு தெரிந்த ஒருவர் முருகன் கோவில் கட்டி வருவதாகவும், கோயிலில் வைப்பதற்கு 10 கிலோ எடை கொண்ட இரண்டு யானை தந்தங்கள் தேவைப்படுகிறது. தந்தங்களை வெட்டி கொடுத்தால் அதற்கு 20 லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும். மான் வேட்டைக்காக அடிக்கடி காட்டுக்குள் சென்று வரும் உங்களால் முடிந்தால் யானை தந்தம் அடித்துக் கொடுங்கள். யானையை கொன்று, தந்தம் வெட்டி எடுக்கும்போது, அதற்கு பூஜை செய்து எடுக்க வேண்டும்’ என்றும் சொன்னார்.
இந்தநிலையில் தான் கொங்குருப்பட்டி சிங்காரபுரம் பகுதிக்கு அடிக்கடி மான் வேட்டைக்கு சென்று வரும் போது மூலப்பில்லூர் வனப்பகுதியில் அந்த ஆண் யானை நடமாடுவதை பார்த்தோம். தொடர்ந்து 27ஆம் தேதி நானும், செந்திலும் யானையை சுட்டுக்கொன்று தந்தத்தை வெட்டி எடுத்தோம்” என்று தெரிவித்திருக்கிறார். 3 Arrested for Hunting Elephant
இந்தசூழலில் நேற்று முன்தினம் மார்ச் 18ஆம் தேதி மூன்று பேரையும் கைவிலங்கு போட்டு யானையை சுட்ட பகுதிக்கு அழைத்துச் சென்று… யானையை சுட்டது எப்படி… எங்கிருந்து யானை வந்தது என்று சம்பவத்தை விவரிக்க சொல்லி போலீசார் விசாரணை நடத்தினர்.

காட்டில் இருந்து வெளியே வரும் போது கைவிலங்குடன் செந்தில் நேற்று முன்தினம் தப்பித்து ஓடியுள்ளார். அன்று இரவு முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனால் நேற்று காலை எரியூர் காவல்நிலையத்தில், கைவிலங்கோடு தப்பி ஓடிய செந்திலை காணவில்லை என்று வனத்துறையினர் புகார் கொடுத்தனர். இதன்பேரில் மீண்டும் போலீசாரும், வனத்துறையும் இணைந்து செந்திலை தேடி வருகின்றனர்.
“செந்திலை பிடித்து அவரிடமும் விஜயகுமாரிடமும் விசாரித்தால் அவர்கள் யார் யாருக்கு மான் கறி சப்ளை செய்திருக்கிறார்கள் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும். இதில் அரசியல்வாதிகள், முக்கிய விஐபிகள் கூட சிக்கலாம்” என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். 3 Arrested for Hunting Elephant