”261 சரித்திர பதிவேடு ரவுடிகள் பாஜகவில் உள்ளனர்“ : டேட்டா மூலம் மோடியை போட்டுத் தாக்கிய ஸ்டாலின்

Published On:

| By christopher

"261 history record raiders are in BJP" : Stalin

“எங்கும் இந்தி – எதிலும் இந்தி” என்று இந்தியைத் திணிப்பதற்கான வேலைகளைக் காலையில் பார்த்துவிட்டு மாலையில் தமிழுக்காக கண்ணீர் வடிக்கிறார். ஒருபக்கம் கண்ணைக் குத்திக்கொண்டு, மற்றொருப் பக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்? என்று பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.  அங்கு அவர் சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி, மற்றும் கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் ஆகியோரை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள நம் திராவிட மாடல் அரசுதான் மக்களின் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கே முன்னோடியாக திகழ்கிறது.

திராவிட மாடலின் குரல், தெற்கில் மட்டும் ஒலிக்கவில்லை; வடக்கிலும் ஒலிக்கிறது; வடக்கிற்கும் சேர்த்தே ஒலிக்கிறது ஒரு மாநில அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நாம்தான் சிறந்த எடுத்துக்காட்டு ஒரு ஒன்றிய அரசு எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு பா.ஜ.க. அரசுதான் எடுத்துக்காட்டு.

யாருக்கு தூக்கம் தொலைந்துவிட்டது?

சில நாட்களுக்கு முன்னால், இதே சேலத்திற்கு வந்த பிரதமர் மோடி, “தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்குக் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து தி.மு.க.வின் தூக்கம் தொலைந்துவிட்டது” என்று பேசிவிட்டுச் சென்றார்.

உண்மையில் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் யார் தெரியுமா? பத்தாண்டுகால பா.ஜ.கவின் மோடி ஆட்சியில் பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்தியதால் சாமானிய மக்கள், தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள் சிலிண்டர் விலையை உயர்த்தியால் தாய்மார்கள், ஏழைகள் தூக்கத்தை தொலைத்துவிட்டார்கள்.

வேலையில்லாத் திண்டாட்டத்தால் இளைஞர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டார்கள். ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை நடத்துகின்றவர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டார்கள். மூன்று வேளாண் சட்டங்களால் உழவர்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள்! தொழிலாளர் விரோத சட்டங்களால் பாட்டாளி மக்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் சிறுபான்மை மக்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள்.

சமூகநீதிக்குச் சவக்குழி தோண்டுவதால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின் மக்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள். இப்படி, பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் ஒட்டுமொத்த நாடுமே தூக்கத்தைத் தொலைத்துவிட்டு நிம்மதியில்லாமல் தவிக்கிறது” என்று பேசினார்.

மோடிக்கு தூக்கம் தொலைந்தது ஏன்?

மேலும் அவர், “இப்படி நாட்டின் அமைதியையும் – மக்களின் நிம்மதியையும் கெடுத்த பா.ஜ.க. ஆட்சியை நடத்தும் பிரதமர் மோடி, இன்றைக்கு உச்சநீதிமன்றத்தால் வெளிவந்துள்ள தேர்தல் பத்திர ஊழலால் தூக்கத்தைத் தொலைத்துள்ளார்!

அதுமட்டுமல்ல, இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது. அதுதான் பிரதமர் மோடிக்கு ஒன்றிய உளவுத்துறை கொடுத்திருக்கும் “ரிப்போர்ட்” என்று ஒரு செய்தி வருகிறது. அதில் ”தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு வரைக்கும் தென் மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது என்பதுதான் நிலைமையாக இருந்தது தேர்தல் பத்திர ஊழல் வெளிவந்த பிறகு, வட மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெறாது என்பதுதான் உண்மையான நிலைமையாக இருக்கிறது!” என்று உளவுத்துறை ரிப்போர்ட் சொல்லியிருக்கிறது.

இதனாலேயும், பிரதமர் மோடி தூக்கத்தைத் தொலைத்துவிட்டுப் பதற்றப்படுகிறார். பதட்டத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழங்குடியின முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மற்றும் டெல்லியில் மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையை விட்டு, கைது செய்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறையை ஏவி விட்டு, நோட்டீஸ் விடுகிறார். எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்த்துப் பேசினால், சி.பி.ஐ ரெய்டு விடுகிறார். ஒருசில பத்திரிகைகள் இதைப் பற்றி விமர்சிக்கிறார்கள்! ஆனால் எதற்கும் பதில் இல்லை. தேர்தல் நேரத்தில், பா.ஜ.க.வுக்கு இப்படி கூட்டணி கட்சிகளைப் போல், E.D. – C.B.I. – I.T. ஆகியவற்றைப் பிரதமர் பயன்படுத்துகிறார் என்றால், உச்சக்கட்ட தோல்வி பயத்தில் இருக்கிறார் என்று அர்த்தம்!” என்று பேசினார்.

பெண் சக்தி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?

மேலும், பெண் சக்தியைப் பற்றி சேலத்தில் பேசியிருந்தார் மோடி. உண்மையில், பா.ஜ.க. ஆட்சியில் பெண்களின் நிலைமை என்ன?

பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான காங்கிரஸ் கொண்டுவந்த நிர்பயா நிதியை முறையாக ஒதுக்காமல் விட்டது பா.ஜ.க. ஆட்சிதான்.

பா.ஜ.க. எம்.பி.யால் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது, அவர்கள் போராடியது எல்லாமே பா.ஜ.க. ஆட்சியில்தான்!

குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது, மோடி ஆட்சியில்தான்!

மணிப்பூரில் பெண்கள் என்ன என்ன கொடுமைகளுக்கு ஆளாகினார்கள் என்று நம்முடைய எம்.பி.க்கள் குழு சென்று பார்த்து வந்து கதறினார்களே… அந்த கொடுமைகளை எல்லாம் இரக்கமில்லாமல் வேடிக்கை பார்த்தது மோடி ஆட்சிதான்!

ஜம்மு காஷ்மீரில், 8 வயதுக் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிக்கு ஆதரவாக இரண்டு பா.ஜ.க. அமைச்சர்கள் ஊர்வலம் சென்றார்களே?

உத்தரப்பிரதேசத்தில் வேலை கேட்டுச் சென்ற இளம்பெண்ணை, பா.ஜ.க. எம்.எல்.ஏ குல்தீப் சிங்கும் அவரின் சகோதரரும், நண்பர்களும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்தார்களே? அதுமட்டுமா, அந்தப் பெண்ணின் தந்தையை அநியாயமாகச் சிறையிலேயே வைத்து கொன்றார்களே? பாலியல் வல்லுறவுக்கு உள்ளான ஒரு பெண்ணை நீதிமன்றத்திற்குச் செல்லும் வழியிலேயே உயிருடன் கொளுத்தினார்களே? அதுவும் பா.ஜ.க. ஆட்சியில்தான்!

இந்தச் செய்திகளுக்கு எல்லாம் பிரதமரிடம் இருந்து பதில் வந்திருக்கிறதா? வருத்தப்படுகிறேன் என்று பெயரளவுக்காவது சொல்லியிருக்கிறார்களா?

இந்த இலட்சணத்தில் பெண் சக்தி என்று பேசுவதற்கு உங்களுக்கும் – பா.ஜ.க. ஆட்சிக்கும் என்ன தகுதி இருக்கிறது? என்ன அருகதை இருக்கிறது?” என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

 மோடியின் கண்ணீரை அவரின் கண்களே நம்பாது!

தொடர்ந்து அவர், “தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் கிடைக்காமல் – கவர்னர் – சிட்டிங் எம்.எல்.ஏ. என்று அழைத்து நிறுத்தி, செய்தியில் இருக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள்… பா.ஜ.க.வுக்கு இருக்கும் பயமெல்லாம், நோட்டாவைவிடக் கீழே சென்றுவிடாமல் டெபாசிட்டாவது வாங்க வேண்டும் என்ற முயற்சிதான் நன்றாகத் தெரிகிறது.

இந்தத் தேர்தல் மட்டுமல்ல, இன்னும் நூறு தேர்தல்கள் நடந்தாலும் பாஜகவின் நாடகம் தமிழ்நாட்டில் எடுபடாது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாடு எப்போதும் புண்ணிய பூமியாகத்தான் இருக்கும். நாட்டை மத அடிப்படையில் துண்டாட நினைக்கும் பா.ஜ.க. பாவிகளின் மண்ணாக இருக்கும்.

இன்று காலை நாளேடுகளில் மோடி பேசிய பேச்சு வெளிவந்திருக்கிறது. தன்னுடைய தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என்று வருத்தப்பட்டு பேசியிருக்கிறார். நேற்று மாலையில் இதைப் பேசிய அவர், காலையில் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? “அகில இந்திய வானொலி” என்ற தமிழ்ப் பெயரை ”ஆகாசவாணி” என்று இந்திப் பெயருக்கு மாற்றி உத்தரவு போட்டிருக்கிறார்.

“எங்கும் இந்தி – எதிலும் இந்தி” என்று இந்தியைத் திணிப்பதற்கான வேலைகளைக் காலை பார்த்துவிட்டு மாலையில் தமிழுக்காக கண்ணீர் வடிக்கிறார். இதற்குத்தான் சொல்வது… மோடியின் கண்ணீரை அவரின் கண்களே நம்பாது. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? ஒருபக்கம் கண்ணைக் குத்திக்கொண்டு, மற்றொரு பக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?

பா.ஜ.க.வில் 261 ரவுடிகள் – ஆதாரம் இருக்கு!

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது என்று புதிய அவதூறு பிரச்சாரத்தைக் கிளப்பியிருக்கிறார். அதற்கு ஏதாவது தரவுகளை ஆதாரமாகச் சொல்கிறாரா என்றால் இல்லை. பா.ஜ.க. ஆளும் மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்தது! அப்போது நீங்கள் எங்குச் சென்றீர்கள்? அந்த மாநில முதலமைச்சரைக் குறைந்தபட்சம் பதவி விலக வைக்க முடிந்ததா? இதுவரை நடக்காத கொடூரமாக, பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றார்களே, அப்போது சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்ததே… அப்போது ஒரு நாட்டின் பிரதமராக நீங்கள் என்ன செய்தீர்கள்? வாயே திறக்கவில்லையே.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் போன்று, சட்டம்-ஒழுங்கு சீர்குலையாமல் சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் வாழும் அமைதியான தமிழ்நாட்டை உங்களுக்குப் பிடிக்கவில்லையா?

என் கையில் ஒரு பட்டியல் இருக்கிறது… நான் ஆதாரத்துடன்தான் பேசுவேன். ஏனென்றால் நான் தலைவர் கலைஞரின் மகன். இதில் இருக்கும் பெயர் பட்டியல் ஏதோ தேசத் தலைவர்களோ… சமூகச் சேவகர்களோ இல்லை… எல்லோரும் சட்டம்–ஒழுங்கைக் கெடுக்கும் ரவுடிகள். சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள்.

ஆனால் இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் எல்லாம், இப்போது எங்கு இருக்கிறார்கள் தெரியுமா? அத்தனை பேரும் பா.ஜ.க.வில்தான் இருக்கிறார்கள். வழக்கமாக இந்த பட்டியல் காவல் நிலையத்தில்தான் ஒட்டப்பட்டிருக்கும்…

32 பக்கங்கள் கொண்ட இந்தப் பட்டியலில், 1977 வழக்குகள் இருக்கும் 261 ரவுடிகள் இருக்கிறார்கள். இவர்களின் பெயர் என்ன? பா.ஜ.க.வில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள்? இவர்கள் மேல் என்ன என்ன பிரிவுகளில் வழக்குகள் இருக்கிறது? என்று இந்தப் பட்டியலில் இருக்கிறது. எல்லா ரவுடிகளையும் உங்கள் கட்சியில் வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கைப் பற்றி நீங்கள் பேசலாமா?

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் போதைப் பொருள்!

அடுத்து, போதைப் பொருட்கள் பற்றியும் மோடி பேசியிருக்கிறார். தி.மு.க.வில் இருந்த ஒருவர் மேல் இது தொடர்பாகக் குற்றச்சாட்டு எழுந்ததுமே, அந்த நபரை அடுத்த விநாடியே கட்சியை விட்டு நீக்கிவிட்டோம். அவர் மீதான விசாரணைக்கு நாங்கள் தடையாக இல்லை. இந்த வழக்கை வைத்து, தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பது போன்று அவதூறு பரப்புரை செய்கிறார். இது, அவர் இப்போது வகிக்கும் பிரதமர் பதவிக்கு அழகல்ல.

இந்தியாவிற்கே போதைப் பொருள் குஜராத் துறைமுகத்தில் இருந்துதான் வருகிறது என்று பிடிக்கிறார்கள்… ஒரு காலத்தில் குஜராத் முதலமைச்சராக இருந்ததே நீங்கள்தானே? இப்போதும் உங்கள் கட்சிதானே அங்கு ஆட்சியில் இருக்கிறது?… இது பற்றியாவது வாய் திறப்பீர்களா?

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் நாட்டிலேயே போதைப் பொருள் அதிகம் விற்பனையாகிறது என்று ஒரு புள்ளிவிவரம் வந்திருக்கிறது… அது எதுவும் நாங்கள் சொன்னது இல்லை… மாநிலங்களவையில் கடந்த டிசம்பர் மாதம் உங்கள் ஆட்சி சார்பில் ஒன்றிய அரசு வைத்த அறிக்கையில் இருக்கிறது.

அதுமட்டுமில்ல, போதைப் பொருள் அதிகமாக கைப்பற்றப்பட்ட ‘டாப் 10’ மாநிலங்களில் ஏழு மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சிதான் நடக்கிறது! இந்தப் பத்து மாநிலங்களில் ‘தமிழ்நாடு’ என்ற பெயரே இல்லை! அந்தளவுக்குக் கடுமையான நடவடிக்கைகளை திராவிட மாடல் அரசு எடுத்து வருகிறது.

பிரதமர் என்பது ஒரு உயர்ந்த பதவி! இதுவரைக்கும் எத்தனையோ பிரதமர்களின் தேர்தல் பிரச்சாரங்களைப் பார்த்திருக்கிறோம்… அவர்கள் ஆட்சியில் நாட்டிற்குச் செய்ததைச் சொல்வார்கள்… அடுத்து ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப்போகிறோம் என்று சொல்வார்கள்… ஆனால் பிரதமர் மோடி சாதனைகள் சொல்ல வழியில்லை என்று வாய்க்கு வந்ததைப் பேசுகிறார்.

இருண்ட காலமும், பொற்காலமும்!

இப்படிப்பட்ட மோடியின் டைரக்‌ஷனில் கள்ளக்கூட்டணி நாடகம் போடும் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிதான் தமிழ்நாட்டின் இருண்ட காலம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; கொடநாடு கொலை, கொள்ளை, தற்கொலை; பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை; தலைமைச் செயலகத்தில் ரெய்டு; அமைச்சர் மற்றும் டி.ஜி.பி. மீது குட்கா வழக்கு; பெண் எஸ்.பி.க்குப் பாலியல் வன்முறை; சட்டம்–ஒழுங்கு என்பதே இல்லாமல், ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரமும் முடங்கிய ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சி!

தான் பதவிசுகம் அனுபவிக்கத் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்தவர்தான் பழனிசாமி! இப்படிப்பட்ட பழனிசாமிக்கு மக்களும் வாக்களிக்கத் தயாராக இல்லை! உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களும் தயாராக இல்லை!

தமிழ்நாட்டின் பொற்காலம் என்பது தி.மு.க. ஆட்சிதான்! தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கியது தி.மு.க. ஆட்சியில்தான்! தமிழ்நாட்டின் கல்வி அறிவு உயர்வுக்கு வித்திட்டது தி.மு.க. ஆட்சிதான்! தமிழ்நாட்டுக்கு எண்ணற்ற முத்திரைத் திட்டங்களை நிறைவேற்றியது தி.மு.க. ஆட்சியில்தான்! இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது தி.மு.க. ஆட்சிதான்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையில் நாம் செயல்படுத்தி வரும் திராவிட மாடலில் தமிழ்நாடு எத்தகைய வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

அதுமட்டுமல்ல, உழவர்களுக்கு இலவச மின் இணைப்புகள், மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48, இப்படி மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா குடும்பத்திற்கும் பார்த்துப் பார்த்து அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகப் பல திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது.

சேலத்திற்கு என்ன வாக்குறுதிகள்?

ஆனால், பத்தாண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த மோடியாலும் இப்படிப்பட்ட சாதனைகளைப் பட்டியலிட முடியுமா? தமிழ்நாட்டை ஆட்சி செய்த பழனிசாமியாலும் பட்டியலிட முடியுமா?

நம்முடைய திராவிட மாடல் அரசின் சாதனைகள் ஒன்றியத்திலும் தொடர வேண்டும் என்றுதான், சாதனைகளாக மாறப்போகும் வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். குறிப்பாக சேலம் நாடாளுமன்றம் தொகுதிக்கு, ஆலங்குப்பம் இரயில்வே சுரங்கப்பாதை மேம்பாலமாக மாற்றி அமைக்கப்படும். சேலம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப் பரிசீலிக்கப்படும். சேலத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய தொழிற்பூங்கா அமைக்கப்படும். சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்” என்று ஸ்டாலின் உரையாற்றினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

வாண்டையார் வீடு தேடிச் சென்ற அண்ணாமலை : தஞ்சாவூர் தடதட!

திருநெல்வேலிக்கும் போங்க… அனிதாவுக்கு ஸ்டாலின் போட்ட அவசர உத்தரவு பின்னணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share