25 சீட் சர்ச்சை : அமித்ஷா பேசியது என்ன?

Published On:

| By Kavi

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. இந்நிலையில் பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள நேற்று (ஜூன் 10) சென்னை வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார்.

25 seat controversy What did Amit Shah say

இன்று (ஜூன் 11) காலை கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் மாவட்ட பொறுப்பாளர்கள், மண்டல தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தமிழ்நாட்டில் இருந்து 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிப்போம் என்று அமித் ஷா கூறியது அரசியல் அரங்கில் பேசு பொருளானது. இந்த 25 இடங்கள் என்பது பாஜகவுக்கு மட்டுமா? அல்லது என்.டி.ஏ கூட்டணியில் இருந்து 25 தொகுதிகளா? என பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்தது.

25 seat controversy What did Amit Shah say

அமித் ஷா பேசியது என்ன?

“தென் சென்னை நிர்வாகிகள் கூட்டத்தில் அமித் ஷா, ’ஜூலை மாதத்துக்குள் 2000 பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும். திமுக ஊழல் செய்கிற கட்சி. குடும்ப ஆட்சி நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து காமராஜர், ராஜாஜி ஆகியோர் பிரதமர்களாக வந்திருக்க வேண்டும். இதனை தடுத்தது திமுக தான்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் என்.டி.ஏ (தேசிய ஜனநாயக கூட்டணி) கூட்டணியில் தமிழகத்தில் இருந்து 25 இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிப்போம்’ என்று கூறினார்” என்றார்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக நிர்வாகிகள்.
வரும் தேர்தலில் 300 தொகுதிகளுக்கும் மேல் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்றும் தெரிவித்திருக்கிறார் அமித்ஷா.

இவ்வாறு மேடையில் அமித் ஷா இந்தியில் பேசிக்கொண்டிருக்க அதனை பாஜகவைச் சேர்ந்த மீனாட்சி தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். அப்போது அமித்ஷா பேசியதை இரு இடங்களில் மீனாட்சி தவறாக மொழிபெயர்த்து கூற, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எழுந்து சென்று அதனை சரி செய்தார்.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மேடைக்கு பின்புறத்தில், பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எச்,ராஜா ஆகியோருடன் உணவருந்தி கொண்டே அமித் ஷா அரசியல் பேசிக்கொண்டிருந்தார்.

எல்.முருகன் எங்கே?

25 seat controversy What did Amit Shah say

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வேலூருக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார் அமித் ஷா. அவரோடு ஹெலிகாப்டரில் அண்ணாமலை, கேசவ விநாயகம், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோரும் பயணித்தனர். ஆனால் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் அமித் ஷாவை நேரில் சென்று வரவேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இன்று அமித் ஷாவின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை. கோவிலம்பாக்கத்தில் நடந்த தென் சென்னை பாஜக நிர்வாகிகள் கூட்டத்திலும், வேலூரில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக்கூட்டத்திலும் மேடையில் அமித் ஷாவுடன் எல்.முருகன் இல்லை.

அமித்ஷாவின் பேச்சு அதிமுக ரியாக்சன்

25 seat controversy What did Amit Shah say

பாஜகவின் மூத்த தலைவர் அமித் ஷாவின் பேச்சு குறித்து ஊடகங்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தென் சென்னை என்பது அதிமுக போட்டியிட்ட தொகுதி. கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று அமித் ஷா பயணம் மேற்கொள்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் காலம் காலமாக என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைதான் பின்பற்றப்படும்.

பாஜகவினருக்கு நிறைய சீட் கேட்க வேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும். ஆனால் அதிமுக என்பது மிகப்பெரிய இயக்கம். பாஜக கேட்கும் தொகுதிகளையும் இடங்களையும் கொடுக்க முடியுமா முடியாதா என்பது கட்சியின் நலன் கருதிதான் இருக்கும். அதிமுக கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது. தொகுதிகளை அதிமுகதான் இறுதி செய்யும்” என்று கூறினார்.

ஹெச்.ராஜா விளக்கம்

அமித்ஷா பேசியது குறித்து கோவிலம்பாக்கம் கூட்டத்தில் கலந்து கொண்ட ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “உள்துறை அமைச்சர் என்.டி.ஏ 25 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என கூறினார். பாஜக என்று சொல்லவில்லை. ஊடகங்களில் பொய் செய்திகள் பரப்பப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அனைத்து தரப்பு மக்களுக்குமானது திராவிட மாடல் அரசு” – ஸ்டாலின்

எதில் தன்னாட்சியும் தற்சார்பும் வேண்டும்?: பகுதி 12

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share