கோடை விடுமுறைக்கு பிறகு வரும் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் மாத இறுதியில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இன்னும் சில தினங்களில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் சென்றவர்கள் பயணம் செய்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகம் இயக்க உள்ளது.
இது குறித்து இன்று (ஜூன் 2) வெளியான அறிக்கையில், “இந்த வருடம் பள்ளிகளுக்கான கோடைக்கால விடுமுறை முடிந்து வரும் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்க இருப்பதால் இந்த வார இறுதி நாட்கள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் கூடுதலான பயணிகள் தமிழகம் எங்கும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தின் முக்கிய இடங்களிலிருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருக்கும் 1,300 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 2,200 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
கோகுல்ராஜ் ஆணவக் கொலை: யுவராஜ் தண்டனையை உறுதிசெய்த உயர்நீதிமன்றம்!