தமிழகத்திலுள்ள 22 சுங்கச்சாவடிகளில் இன்று (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் சுமார் 44 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், சில தனியார் நிறுவனங்களாலும் சுங்கச்சாவடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டு தோறும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் தமிழகத்தில் 22 இடங்களில் சுங்ககட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
சூரப்பட்டு, வானகரம், விழுப்புரம், பரனூர், சேலம் ஆத்தூர், கிருஷ்ணகிரி, திருத்தணி, பட்டறை பெரும்புதூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கோவை கன்னியூர், தூத்துக்குடி சாலைப்பூதூர், வேலூர் பள்ளிகொண்டா, வாணியம்பாடி, நெல்லை, மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
அதாவது 52 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையில் ஒரு முறை கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு கட்டணம் ரூ.55ல் இருந்து ரூ.60ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இலகு ரக வர்த்தக மற்றும் சரக்கு வாகனங்களுக்கு ரூ.90ல் இருந்து ரூ.95 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. கனரக வாகனங்களுக்கு ரூ. 295ல் இருந்து 305ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
பழைய கட்டணத்தைக் காட்டிலும் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தற்போது உயர்த்தியிருக்கிறது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இது வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை ஏற்கனவே அதிகமாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சாலைகளை முறையாக பராமரிக்கவில்லை என்றாலும், கட்டணத்தை மட்டும் தொடர்ந்து உயர்த்தி வருவதாக அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
