வைஃபை ஆன் செய்ததும் நாடு முழுதும் வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
“ஜூன் 4 ஆம் தேதி காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், தற்போதைய ஆளுங்கட்சியான பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் இந்தியா கூட்டணியும் இறுதிகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு செயல் திட்டங்களை வகுத்துள்ளன.
இன்று (ஜூன் 3) தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் 101 ஆவது பிறந்தநாளை ஒட்டி தற்போதைய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின்… பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
காலை கோபாலபுரம் சென்று கலைஞர் இல்லத்தில் அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின், அடுத்து கடற்கரையில் அண்ணா-கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று வணங்கினார். ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்திருக்கும் கலைஞர் சிலைக்கு மரியாதை, அறிவாலயம் சென்று மரியாதை, முரசொலி அலுவலகம் சென்றும் அங்கே கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மலர் வெளியிட்டுவிட்டு கோபாலபுரத்துக்கு சாப்பிட வந்தார் ஸ்டாலின்.
அப்போது தன்னை சந்தித்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் அனைவரிடமும், ‘இங்க தமிழ்நாட்ல மட்டுமல்ல இந்தியா முழுதும் நாமதான் ஜெயிக்கப் போறோம். கார்கே சொன்ன 295 ஐ விட அதிக இடங்கள் ஜெயிப்போம், நாமதான் கவர்ன்மென்ட் ஃபார்ம் பண்றோம்’ என்று நம்பிக்கையாகவும் உற்சாகமாகவும் சொல்லியிருக்கிறார்.
டெல்லியில் கலைஞர் அறிவாலயத்தில் கலைஞரின் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு மரியாதை செலுத்திய சோனியா, ராகுல் உள்ளிட்டோர் டி.ஆர்.பாலுவிடம் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர். அதை சென்னையில் இருக்கும் ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார் பாலு. இந்த அடிப்படையிலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தனக்கு வந்த தகவல்களின் அடிப்படையில்தான்… ‘295 க்கு மேல் வெற்றி பெறுவோம்’ என்று நம்பிக்கையாக சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.
டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் நாளை வெற்றியை கொண்டாடுவதற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் இன்று மதியமே தொடங்கிவிட்டன.
ஜூன் 1 இந்தியா கூட்டணிக் கூட்டம், ஜூன் 2 ஆம் தேதி காங்கிரஸ் மாநில தலைவர்களுடான சூம் மீட்டிங் என மிகத் தீவிர ஆலோசனையில் இருக்கிறது காங்கிரஸ் கட்சி. வாக்கு எண்ணிக்கை தினத்தன்று காங்கிரஸ் நிர்வாகிகள் கடுமையான விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் தத்தமது மாவட்ட தலைவர்களுடன் சூம் மீட்டிங் நடத்தி ஆலோசனை அளித்தனர்.
இன்று ஜூன் 3 ஆம் தேதி அரசியல் சாசன வழக்கறிஞர்களோடு நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது காங்கிரஸ். அதாவது, தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஒரு வேளை பாஜக தனிப்பெரும் கட்சியாக வந்தாலும், பெரும்பான்மை இந்தியா கூட்டணிக்கே கிடைக்கும் நிலையில்… தேர்தலுக்கு முன்பே அமைக்கப்பட்ட கூட்டணி என்பதால் இந்தியா கூட்டணியையே ஆட்சி அமைக்க அழைத்திட வேண்டும் என்று குடியரசுத் தலைவரை வலியுறுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்துவது, இந்தியா கூட்டணி எம்.பி.க்களிடம் கையெழுத்து பெறுவது, அதை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைப்பது பற்றிய ஆலோசனைகளில் காங்கிரஸ் ஈடுபட்டது.
திமுக, காங்கிரஸ் இப்படி என்றால் பாஜகவும் தேர்தல் முடிவுகள் பற்றிய படபடப்பில்தான் இருக்கிறது. எக்சிட் போல் பாஜகவுக்கு சாதகமாக வந்தாலும் அதை முழுமையாக நம்ப பாஜகவும் தயாராக இல்லை.
இன்று (ஜூன் 3) டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வீட்டில் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவுக்கு ஒருவேளை மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பொதுச்செயலாளர் வினோத் ட்வதே, ‘முக்கிய ஆலோசனை நடத்தினோம். வெற்றிக் கொண்டாட்டம் பற்றி நாங்கள் எதுவும் திட்டமிடவில்லை. தேர்தல் முடிவுகள் வரட்டும்’ என்று பதிலளித்தார்.
ஜூன் 2 ஆம் தேதி பிரதமர் மோடி முக்கிய அதிகாரிகளுடன் புதிதாக அமையப் போகும் அரசின் முதல் 100 நாட்களில் செய்ய வேண்டிய திட்டங்கள் பற்றி ஆலோசனை நடத்தினார். பிரதமரின் இந்த ஆலோசனை அவரது நம்பிக்கையை காட்டுவதாக இருந்தாலும்…இன்று நட்டா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எக்சிட் போலுக்கு அப்பால் முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றிருக்கிறது.
பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று வழக்கமான அளவு பாஜக நிர்வாகிகளோ டெல்லி தொண்டர்களோ கூட வரவில்லை என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.
பாஜகவின் முக்கிய டெல்லி நிர்வாகிகளிடம் பேசியபோது, ‘எக்சிட் போல் எங்களுக்கு வாரிக் கொட்டியிருந்தாலும் மொத்தமாக 240 க்கு மேல் தாண்ட மாட்டோம் என்பதுதான் கட்சியின் தலைமைக்கு கிடைத்திருக்கும் ரிப்போர்ட். அதனால்தான் தேர்தல் கொண்டாட்டத்துக்கு கூட தயாராக இல்லை என்று வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார் வினோத் ட்வதே. எனினும் பற்றாக்குறை இடங்களை சரிசெய்து எப்படி மெஜாரிட்டி அடைவது என்ற தீவிர ஆலோசனையில் இருக்கிறோம்’ என்றனர்.
2019 தேர்தலில் இல்லாத அளவுக்கு பெரும் நம்பிக்கையோடு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன. எக்சிட் போல் வந்தாலும் எச்சரிக்கை உணர்வோடே இருக்கிறது பாஜக” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: கேசவ விநாயகனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!