இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய மக்களவை உறுப்பினர் மற்றும் வர்ணனையாளருமான கவுதம் கம்பீர், அடிக்கடி அதிரடியான சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பதை வழக்கமாக கொண்டவர்.
இந்நிலையில், 2011 உலகக்கோப்பையில் தோனியை விட ‘ஆட்ட நாயகன்’ விருதுக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானே தகுதியானவர் என கூறியுள்ள கருத்து, கிரிக்கெட் ரசிகர்களிடையே புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, இந்தியாவில் நடைபெற்றுவரும் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான வர்ணனையில் ஈடுபட்டிருந்த சமயத்தில், இது குறித்து பேசிய கவுதம் கம்பீர், “மகேந்திர சிங் தோனிக்கு விருது வழங்கப்பட்டிருந்தாலும், என்னை பொறுத்தவரை ஜாகீர் கான் தான் உண்மையான ‘ஆட்ட நாயகன்’. பந்துவீச்சின் துவக்கத்தில், ஜாகீர் கான் அந்த அதிரடியை காட்டாமல் இருந்திருந்தால், இலங்கை எளிதாக 350 ரன்களை சேர்த்திருக்கும். நாம் அனைவரும் என்னுடைய ஆட்டம் மற்றும் தோனியின் சிக்ஸ் குறித்து மட்டுமே பேசுகிறோம் தவிர, ஜாகீர் கானின் அந்த பந்துவீச்சு குறித்து நினைவு கூறுவதில்லை. ஜாகீர் கான் தான் இறுதிப்போட்டியின் நாயகன்” எனத் தெரிவித்துள்ளார்.

2011 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில், கவுதம் கம்பீர் 97 ரன்கள் குவித்திருந்தார். அந்த போட்டியில், அதிரடியாக விளையாடி 79 பந்துகளில் 91 ரன்கள் குவித்த இந்திய அணியின் அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இறுதிப்போட்டிக்கான ‘ஆட்ட நாயகன்’ விருது வழங்கப்பட்டது.
முதலில் பந்துவீசிய இந்திய அணிக்காக, ஜாகீர் கான் 10 ஓவர்களில் 60 ரன்கள் வழங்கி 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். ஆனால், இந்த போட்டியின் பவர்பிளேவில் பந்துவீச துவங்கிய ஜாஹீர் கான், தனது முதல் 3 ஓவர்களையும் மெய்டன் ஓவர்களாக வீசி, தனது 4வது ஓவரின் முதல் பந்திலேயே இலங்கை அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரர் உபல் தரங்காவின் விக்கெட்டை கைப்பற்றினார். மேலும், தனது முதல் 5 ஓவர்களில், வெறும் 6 ரன்களை மட்டுமே ஜாகீர் கான் வழங்கியிருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
ஃபிலிப்கார்ட் பண்டிகை விற்பனை : 1.4 பில்லியன் வாடிக்கையாளர்கள் வருகை!
