தீபாவளி வர்த்தகம் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில் 2,000 ரூபாய் நோட்டு செல்லாது, புதிய 1,000 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு வந்துவிட்டன என்கிற வதந்திகள் பல இடங்களில் பரவிவருகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டில் புழக்கத்திலிருந்த 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. பழைய நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு 2,000 ரூபாய் மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டன.அதற்குப் பின்னர், புதிய 100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன.
இந்த நிலையில் கூடிய விரைவில் புதிய 1,000 ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என்றும் அதன் புகைப்படங்கள் எனச் சில 1,000 ரூபாய் நோட்டின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பலர் ஷேர் செய்து வருகிறார்கள்.ஆனால், 1,000 ரூபாய் நோட்டுக்குப் பதிலாக, புதிய நோட்டு அறிமுகப்படுத்தப்படுமா என்பதைப் பற்றிய தகவல் இதுவரை தெரியவில்லை. ரிசர்வ் வங்கியும் இது தொடர்பாக எந்தத் தகவலையும் வெளியிடாமலேயே இருந்து வருகிறது.
இந்த நிலையில் சில நாள்களுக்கு முன்பு ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நடப்பு நிதியாண்டில், ஒரு 2,000 ரூபாய் நோட்டு கூட அச்சிடப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இதனால், ‘2,000 ரூபாய் நோட்டுகள் கூடிய விரைவில் செல்லாமல் போகும். எனவே, உடனடியாக வங்கிக்குச் சென்று மாற்றிக் கொள்ளுங்கள்’ என்பது போன்ற தகவல்கள் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் நேற்று (அக்டோபர் 25) ஆங்கில ஊடகத்தில் பேசும்போது, “மீண்டும் 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது குறித்து எங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. அவ்வாறு 1,000 ரூபாய் நோட்டுகள் வந்தாலும், தற்போது புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டு செல்லாதது ஆகிவிடாது. அதுகுறித்து மத்திய அரசு அறிவித்தால் செல்லாததாகும். அதுவரை புழக்கத்தில் இருக்கும். எனவே, 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது போன்ற வதந்திகளைப் பொது மக்கள் நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
�,