போலீஸ் ஸ்டிக்கருடன் வந்த கன்டெய்னரில் ரூ. 2000 கோடி : யாருக்குச் சொந்தமானது?

Published On:

| By Kavi

ஆந்திர மாநிலத்தில் 4 கன்டெய்னரில் கட்டுகட்டாக 2000 கோடி ரூபாய் எடுத்துச் செல்லப்பட்டது குறித்துப் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

இதனால் அங்கு ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்துச் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு அமலில் இருக்கிறது. பறக்கும் படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அனந்தபுரம் மாவட்டத்தில் பாமிடி அருகே கஜ்ராம்பள்ளி என்ற இடத்தில் போலீசார் இன்று (மே 2) வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

ADVERTISEMENT

அப்போது அவ்வழியாக 4 கண்டெய்னர் லாரிகள் வந்தன. அதன் முன்புறம் போலீஸ் சின்னம் இருந்தது. இருந்தாலும் கன்டெய்னர் லாரி என்பதால் அதனை நிறுத்தி போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில் ஒவ்வொரு லாரியிலும் 500 கோடி ரூபாய் என 4 லாரியிலும் 2000 கோடி ரூபாய் கட்டுக்கட்டாக இருந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வருமான வரித்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் இந்த 4 வாகனங்களும் கேரளாவில் உள்ள வங்கிகளிலிருந்து பணம் ஏற்றி வந்ததும், ஹைதராபாத்தில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைக்கு இந்த பணம் எடுத்துச் செல்லப்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து ஆவணங்களைச் சரிபார்த்த அதிகாரிகள் 4 கன்டெய்னர்களையும் அனுப்பி வைத்தனர்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share