ரூ.1200 கோடி மதிப்புள்ள 200 கிலோ ஹெராயின் போதை பொருட்களை பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு கடத்தி வந்த ஆறு இரானியர்களை, கொச்சி கடல் பகுதியில் வைத்து தேசிய போதை மருந்து தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 200 கிலோ ஹெராயின் போதை பொருட்கள், பாகிஸ்தானுக்கு வந்தது.
பாகிஸ்தானிலிருந்து இரானிய கப்பல் மூலம் இந்தியா மற்றும் இலங்கையில் ஹெராயின் போதை பொருளை கைமாற்றுவதற்காக திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தேசிய போதை மருந்து தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில், அவர்கள் நேற்று (அக்டோபர் 7) கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் ஹெராயின் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போதை பொருள் தடுப்பு அதிகாரி சஞ்சய் குமார் சிங் கூறும்போது,
“ஹெராயின் கடத்தல் குறித்த தகவல் வந்ததும் நாங்கள் கேரளாவின் கொச்சி கடலோர பகுதியில் சோதனையில் ஈடுபட்டோம்.
ஹெராயின் போதை பொருள் கடத்திய வந்த பாக்கெட்டுகள் தனித்துவமான அடையாளங்களுடன் இருந்தது. போதை பொருட்கள் கடத்தி வந்த பாக்கெட்டுகளில் தேள் மற்றும் டிராகன் முத்திரைகள் இருந்தன.
ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட சுமார் ரூ.1200 கோடி மதிப்புள்ள, 200 கிலோ ஹெராயின் பாகிஸ்தானிலிருந்து இரானிய கப்பலில் ஏற்றப்பட்டு, நடுக்கடலில் இலங்கை கப்பலில் பரிமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

போதை பொருட்களை இலங்கை கப்பலில் பரிமாற்றம் செய்வதற்கு முன்பே இரானிய கப்பலை பிடித்து விட்டோம். இலங்கை கப்பலை அடையாளம் கண்டு இடைமறிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து அந்த கப்பலை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கப்பலில் இருந்த இரானியர்கள் கடலில் குதித்து தப்பிக்க முயற்சித்தனர்.
மேலும், போதை பொருட்களை கடலில் கொட்டவும் முயற்சி செய்தனர். நாங்கள் அவர்களது கப்பலை சுற்றி வளைத்து அவர்களை கைது செய்தோம்.
கடல் வழியாக இந்தியாவிற்கு ஆப்கானிஸ்தானில் இருந்து அரபி கடல் மற்றும் இந்திய பெருங்கடல் வழியாக போதை பொருள் கடத்தி வருவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.” என்று அவர் தெரிவித்தார்.
செல்வம்