கர்நாடக மாநிலத்தில் 200 விவசாயிகள் ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளனர். உலகம் தற்பொழுது தான் ரஷ்யா உக்ரேன் போரால் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஆனால் விவசாயிகள் தங்கள் வாழ்நாள் முழுவதுமே பொருளாதார வீழ்ச்சியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்வதெல்லாம் ஒரு கனவாக இருந்த நிலையில் கர்நாடக அரசு அதனை நிஜமாக்கி உள்ளது. கர்நாடக சுற்றுலா மேம்பாட்டுத்துறை திட்டத்தின் கீழ், ஹம்பி உட்பட பல இடங்களில் ஹெலி டூரிசம் தொடங்கப்படுகிறது.
இந்நிலையில் சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்காவில் ஹெலி டூரிசம் தொடங்கப்பட்டது. இந்த ஹெலி டூரிசத்தை பிரபலப்படுத்த புது முயற்சியாக, சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்காவில் முதல் இரண்டு நாட்களில் அனைத்து விவசாயிகளுக்கும், ஆடு மேய்க்கும் தொழிலாளர்களுக்கும் ஹெலிகாப்டர் பயணம் இலவசமாக வழங்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இலவசமாக பயணம் செய்த விவசாயிகளும், ஆடு மேய்க்கும் தொழிலாளர்களும் சுற்றுவட்டாரப் பகுதிகளை கண்டுகளித்து மகிழ்ந்தனர். நேற்று முன்தினமும், நேற்றும் நடைபெற்ற இந்த இலவச விவசாயிகள் ஹெலிகாப்டர் பயணத்தில் சுமார் 200 விவசாயிகள் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்களிலும் காலை 8 மணி முதல் மதியம் 2 30 மணி வரை ஹெலிகாப்டர் இலவச பயணம் நடைபெற்றது. குறிப்பாக இரண்டாவது நாளான நேற்று ஏராளமான விவசாயிகளும், ஆடு மேய்க்கும் தொழிலாளர்களும் பயணம் செய்தனர். இன்று முதல் தொடர்ந்து வரும் நாட்களில் கட்டணங்களுடன் சுற்றுலா பயணிகளுக்கு ஹெலிகாப்டரில் சுற்றுலா பயணத்தை கர்நாடக அரசு வழங்குகிறது.
மேலும், வாணிவிலாஸ் அணைக்கட்டில் இலவச படகு சவாரியும் நடத்தப்பட்டது. ஒசநகர் தொகுதி எம்.எல்.ஏ. கூலிகட்டி சேகர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். கர்நாடக டூரிசத்தை பிரபலப்படுத்த நடந்த இந்த புது முயற்சியை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
