ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், ஆசைத்தம்பி ஆகியோர் இன்று (மே 2) சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர்.
ஏப்ரல் 6-ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், தாம்பரத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 3 பேர் சிக்கினர்.
பிடிபட்ட 3 பேரும் புரசைவாக்கத்தில் உள்ள பாஜக எம்எல்ஏவும், நெல்லை நாடாளுமன்ற பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணியாற்றும் சதீஷ், நவீன், லாரி டிரைவர் பெருமாள் ஆகியோர் என்பது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், பாஜக நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக வாக்குமூலம் அளித்தனர்.
இதனையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
நயினார் நாகேந்திரனுக்காக பணம் கொண்டு செல்வதாக சதீஷ் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதைத் தொடர்ந்து, நயினார் நாகேந்திரனின் வழக்கறிஞர் காவல் நிலையத்தில் ஆஜராகி தாம்பரம் ஆய்வாளர் பால முரளியிடம் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், நயினார் நாகேந்திரன் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் வழங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், ரயிலில் சிக்கிய பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று (மே 2) தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக நயினார் நாகேந்திரன் ஆஜராக இருப்பதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்படி, சிபிசிஐடி 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிபிசிஐடி அதிகாரிகள் பிடிபட்ட 3 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், ஏப்ரல் 30ஆம் தேதி நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பெருமாள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இவர்களிடம் விசாரணை முடிந்த பிறகு நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி திட்டமிட்டிருந்தது.
அதன்படி சம்மன் அனுப்பப்பட்ட நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், ஆசைத்தம்பி ஆகியோர் சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று (மே 2) விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டினாரா மாநகர திமுக செயலாளர்?
”பொய் இயந்திரமாக மாறியுள்ளார்” : மோடிக்கு காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி!