ராமநாதபுரம்: 2 மாதத்துக்கு 144 தடை, 7 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு- என்ன காரணம்?

Published On:

| By Monisha

ராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு 2 மாதங்களுக்கு மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இன்று (செப்டம்பர் 8) அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11-ல் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்டோபர் 30-ம் தேதி கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவும் கொண்டாடப்படவிருக்கிறது.

இதனால் செப்டம்பர் 9 முதல் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று ராமநாதபுர மாவட்டம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட்டம் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 9-15 ஆம் தேதி வரையும், அக்டோபர் 25-31 ஆம் தேதி வரையும் வெளிமாவட்டங்களிலிருந்து வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2 months 144 in Ramanathapura

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் சுமார் 7,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மாவட்ட எல்லையான மருச்சுக்கட்டி முதல் பரமக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 145 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பரமக்குடியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

அஞ்சலி செலுத்துவதற்கு மாவட்டத்திற்குள்ளேயிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் வாகனங்களில் மக்கள் யாரும் வருவதற்கு அனுமதி கிடையாது என்று கூறியுள்ளார்.

வெளி மாவட்டங்களிலிருந்து சொந்த வாகனங்களில் வருவோர் அந்தந்த மாவட்ட டிஎஸ்பி அலுவலகங்களிலிருந்து வாகன அனுமதிச்சீட்டு பெற்று வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

2 months 144 in Ramanathapura

மேலும் வாகனங்களில் ஒலிபெருக்கி, பேனர்கள் கட்டிக்கொண்டு வரக்கூடாது. பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே மக்கள் வந்து செல்ல வேண்டும்.

அஞ்சலி செலுத்த வருபவர்களின் போக்குவரத்து வசதிக்காகத் தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை மூலம் 200 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பேருந்துகளிலும் ஒரு போலீஸ் பயணிப்பார்கள், இதுவரை 795 பேர் சொந்த வாகனங்களில் அஞ்சலி செலுத்த வருவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருக்கின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த 144 தடை உத்தரவு செப்டம்பர் 9 நள்ளிரவு 12 மணி முதல் தொடங்கவுள்ளது.

மோனிஷா

வைரலாகும் பொதுக் கழிப்பறை: கோவை மாநகராட்சி விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share