அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் தீப்பிடித்த நிலையில், அதிலிருந்த 179 பேரும் அலறியபடி அவசர கதவு வழியாக வெளியேற்றப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 179 lives scaped from american al fire accident
அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் இந்திய நேரப்படி இன்று (ஜூலை 27) அதிகாலை 2:15 மணியளவில் மியாமிக்கு புறப்பட்டது. அதில் 173 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என மொத்தம் 179 பேர் பயணித்தனர்.
அப்போது திடீரென விமானத்தில் தீ ஏற்பட்டு, புகை மளமளவென பரவியது. இதனைக் கண்டு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் விமானியிடம் எச்சரித்துள்ளார். மேலும் விமானத்தில் பக்கவாட்டில் இருந்து மளமளவென எழுந்த புகையைக் கண்டு பயணிகளும் அச்சத்தில் அலறினர்.
இதனையடுத்து விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, அவசர வழிக் கதவுகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து பயணிகள், ஊழியர்கள் என 179 பேரும் பத்திரமாக வெளியேறினர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
இதனையறிந்து உடனடியாக அங்கு விரைந்த டென்வர் தீயணைப்புத்துறையினர், விமானத்தில் இருந்து எழுந்த தீயை அணைத்தனர்.
விமானம் புறப்பட்டபோது, தரையிறங்கும் கியர் செயழலிந்ததால், அதிலிருந்து தீ ஏற்பட்டதாகவும், பயணி ஒருவர் படுகாயமடைந்ததாகவும் மத்திய விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “தீ விபத்தை தொடர்ந்து 173 பயணிகளும் 6 பணியாளர்களும் விமானத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேறினர்.
விபத்தில் லேசான காயம் ஏற்பட்ட 6 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் பராமரிப்பு குழுவினரால் பரிசோதிக்கப்படுவதற்காக அதன் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். பயணிகள் அனைவரும் மற்றொரு விமானம் மூலம் மியாமிக்கு புறப்பட ஏற்பாடு செய்யப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
