உங்களுக்கு 17 வயசு ஆயிடுச்சா? வாக்காளர் பட்டியல்ல சேர இதைச் செய்ங்க!

Published On:

| By Monisha

இனி 17 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கூட வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க முடியும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி இன்று தொடங்குகிறது.

இதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று (அக்டோபர் 27) வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

அப்போது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகள்  அரசியல் கட்சிகளிடம் இந்த வரைவு வாக்காளர் பட்டியலின் 2 நகல்களை கொடுப்பார்கள்.

இன்றிலிருந்து டிசம்பர் 9 ஆம் தேதி வரை ஒவ்வோர் வாக்குச்சாவடி பகுதிகளிலும் இந்த வாக்காளர் பட்டியல் வைக்கப்பட உள்ளது. அதில், பெயர் சரி பார்ப்பது, முகவரி மாற்றுவது, புது வாக்காளர்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகள் செய்யப்படும்.

புதிய வாக்காளர்கள் இந்த பட்டியலில் அவர்களுடைய பெயர்களை சேர்க்க வேண்டும். இந்த வாக்காளர் பட்டியலில் முகவரியை மாற்றிக் கொள்ளலாம். புதிய வாக்காளர்கள் 17 வயதுக்கு மேல் இருந்தால் கூட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.

முதலில் இருந்த முறைப்படி ஜனவரி 1 ஆம் தேதி 18 வயது ஆகியிருந்தால் தான் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியும். ஆனால் தற்போது, ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆம் தேதி என மொத்தம் 4 காலாண்டுகளில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்க்க முடியும்.

merge name in voters list

எனவே 17 வயதுக்கு மேல் உள்ள அத்தனை இளைஞர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர் பட்டியல் இருக்கும். அதில் பெயர்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். பெயர் இல்லையென்றால் சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தேர்தல் ஆணைய இணைய தளத்திலும் பெயர், முகவரி, பெயர் நீக்கம், பெயர் சேர்ப்பு என அனைத்தையும் சரிபார்த்துக் கொள்ளலாம். வாக்காளர் உதவி மொபைல் ஆப் மூலமாக கூட பெயர், முகவரிகளை சரிபார்த்துக் கொள்ளலாம்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்களும் நடைபெற உள்ளது. நவம்பர் 4 மற்றும் 5, நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய 4 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாம்களில் தேர்தல் அதிகாரிகள் இருப்பார்கள். சிறப்பு முகாம்களில் புது வாக்காளர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களும் வழங்கப்படும்.

ஒரே வாக்காளர் இரண்டு அல்லது மூன்று முகவரிகளில் பதிவு செய்திருந்தால் தேர்தல் ஆணையத்தின் கம்யூட்டர் ஆப்பில் தெரிய வரும். அவர்களுக்கு  கடிதம் அனுப்பி வைக்கப்படும்.

இதற்கு வாக்காளர் அவருடைய பெயர் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று பதிலளிக்க வேண்டும். பதில் அளிக்கவில்லை என்றால் பிஎல்ஓ (வாக்குச்சாவடி அலுவலர்) நேரில் சென்று அவர்களுடைய பெயர் எந்த முகவரியில் இருக்க வேண்டும் என்று கேட்டு அதனைப் பதிவு செய்வார்கள்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

ஆளுநரை மாத்திடாதீங்க : ஸ்டாலின் பேச்சு!

’ஜப்பான்’ எப்படிப்பட்ட படம்?: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share