தமிழ்நாட்டில் இயக்கப்படும் 1,500 பழைய பேருந்துகளை விரைவில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்துள்ளார்.
கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கொரோனா காலத்துக்குப் பிறகு தனியார் பள்ளி மாணவ மாணவிகள் அதிக அளவில் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். மேலும், புரட்சி பெண் திட்டத்தின் கீழ் 1,000 ரூபாய் வழங்கப்படுவதால் மாணவிகளின் கல்லூரி வருகை அதிகரித்துள்ளதால் தற்போது அரசு பேருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனை தீர்க்கும் பொருட்டு முதல்வரின் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்துத் துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் இணைந்த whatsapp குழு அமைத்து அவர்களுக்கு உரிய பேருந்துகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் 100 மின்சாரப் பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் போடப்பட்டுள்ள நிலையில், அது சென்னையில் பெறும் வெற்றியைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் படிப்படியாக மின்சாரப் பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படும். 15 ஆண்டுக் காலம் ஆன பேருந்துகள் என 1500 பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்தினால் கிராம பேருந்துகள் சேவை பெருமளவில் பாதிக்கப்படும் என்பதால் ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு தற்போது அந்தப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
புதிய பேருந்துகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் திறக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் புதிய பேருந்துகள் வந்துவிடும். அதன் பிறகு 15 ஆண்டுகள் இயக்கப்பட்ட பேருந்துகள் நிறுத்தப்படும். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து மற்ற போக்குவரத்து பணிமனைகளிலும் உள்ள காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.
ராஜ்
நாகர்கோவில் – தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்!
சம்பளம் குறைப்பு: தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்!