தண்டாவளத்தின் மீது ரீல்ஸ் எடுப்பதற்காக நின்றபோது, ரயில் மோதியதில் 15 வயது சிறுவன் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் மாங்கலகாட் பகுதியைச் சேர்ந்தவர் பிஸ்வஜித் சாஹூ (வயது 15). இவர் தனது குடும்பத்தினருடன் தட்சினகாளி கோவிலுக்கு தரிசனத்துக்காக சென்றுள்ளார். அந்த கோவில் அருகே ஜனகதேய்பூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்து சிறிது தூரத்தில் இரும்பு ரயில்வே மேம்பாலம் உள்ளது. அந்தப்பகுதிக்கு செல்ல யாரும் அனுமதியில்லை.
இந்த நிலையில் கோவிலுக்கு சென்ற சிறுவன் சாஹூ தனது நண்பருடன் அருகிலுள்ள ஆபத்தான அந்த ரயில் மேம்பாலத்தில் ஏறி நின்றுள்ளார்.
அப்போது அந்த பாதையில் வேகமாக ரயில் வந்துள்ளது. அப்போது அதன் முன் நின்று செல்பி எடுக்க வேண்டும் என்ற வேட்கையில் சாஹூ அங்கிருந்து நகரவில்லை. சிறுவனை பார்த்ததும் ரயில் லோகோ பைலட்டும் ‛ஹாரன்’ அடித்து எச்சரித்துள்ளார். ஆனால் சாஹூ அங்கிருந்து ஒரு அடி கூட நகராமல் நின்ற நிலையில், வேகமாக வந்த ரயில் மோதியதில் சாஹு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனின் மொபைலையும் போலீசார் கைப்பற்றிய நிலையில், ரயில் அவன் மீது மோதியது தொடர்பான வீடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக ஜனகதேய்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரீல்ஸ் மோகத்தால் ரயில் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியான நிலையில் அதனை பார்த்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
