எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்திய அரசின் சார்பில் இலங்கைக்கு 40,000 டன் அரிசி கப்பலில் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையிலும், தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையை இலங்கை அரசு கைவிடவில்லை.
நேற்று ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மீனவர்கள் அமைதியாக மீன்பிடித்து வீடு திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையினர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்போதுதான் எங்களால் மீன்பிடித் தொழிலை நிம்மதியாக செய்ய முடியும் என்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கூறுகின்றனர்.
**-வினிதா**