சிறுபான்மையினர் அச்சுறுத்தல், நீட் முறைகேடு, அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்து மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். இந்த நிலையில் அவரது உரையிலிருந்து 11 பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக இன்று (ஜூலை 2)அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நேற்று (ஜூலை 1) எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசினார்.
அப்போது அவர், நாட்டில் பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் வன்முறையையும் வெறுப்பையும் பிரச்சாரம் செய்து பரப்புவதாகக் குற்றம் சாட்டினார். மேலும் சிவபெருமான், முகமது நபி, குருநானக், இயேசு கிறிஸ்து, புத்தர் மற்றும் மகாவீரர் ஆகியோரின் புகைப்படங்களை அவையில் எடுத்துக்காட்டி அவர்களின் போதனைகளில் இருந்து தான் அச்சமின்மையை எடுத்துக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து சிறுபான்மையினர் மீதான அச்சுறுத்தல், நீட் முறைகேடு, அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்து மக்களவையில் நேற்று சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் ராகுல் காந்தி மக்களவையில் பேசினார்.
இதற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உட்பட பாஜக எம்பிக்கள் பலரும் அவ்வபோது எழுந்து நின்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ், சபாநாயகர், சிறுபான்மையினர் அச்சுறுத்தல், தொழிலதிபர்கள் அதானி, அம்பானி மற்றும் அக்னிபாத் திட்டம் குறித்து ராகுல்காந்தி நேற்று பேசிய 11 பகுதிகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று மக்களவைக்கு வருகை தந்த ராகுல்காந்தி பேசுகையில், “மோடிஜியின் உலகில் உண்மையை அழிக்க முடியும். ஆனால் நிஜ உலகில் உண்மையை என்றுமே அகற்ற முடியாது, நான் சொல்ல வேண்டியதை நேற்று சொல்லிவிட்டேன். அவை அனைத்தும் உண்மையே. அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் நீக்கட்டும். அவர்களால் உண்மையை மாற்ற முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Share Market : சாதனை உச்சத்துடன் தொடங்கிய இன்றைய பங்கு வர்த்தகம்!