தமிழ்நாட்டுக்கு 100 நாள் வேலை திட்டத்துக்காக வழங்கப்பட வேண்டிய ரூ.3,796 கோடியை மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 100 days of work Central government due
இன்று (மார்ச் 14) தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையை வாசித்து வரும் அவர்,
“தமிழ்நாட்டின் கடைக்கோடி குக்கிராமங்களையும் சென்றடையும் வகையில் தரமான சாலை வசதிகளை உருவாக்கிடும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டு 6,100 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமச் சாலைகள் 2,200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
மேலும், கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளின் தொடர் பராமரிப்பிற்கென ஒவ்வொரு ஆண்டும் மாநில நிதிக் குழு மானியத்திலிருந்து உரிய நிதி ஒதுக்கிட முடிவு செய்து, 2025-26 ஆம் ஆண்டிற்கு 120 கோடி ரூபாய் விடுவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் கடந்த 2001 ஆம் ஆண்டிற்கு முன்னர் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் ஊரகப் பகுதிகளில் வாழும் விளிம்புநிலை மக்களுக்காகக் கட்டப்பட்டு, தற்போது சீரமைக்க முடியாமல் மிகவும் பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக, புதிய வீடுகளை கட்டித் தர இந்த அரசு முடிவு செய்துள்ளது. 2025-26 ஆம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் புதிய வீடுகள் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.
தமிழ்நாட்டின் அனைத்து குக்கிராமங்களும் தன்னிறைவு பெற்றிடும் வகையில், பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரும் நோக்கத்தோடு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-IIன் கீழ், 2025-26 ஆம் ஆண்டில் 2,329 கிராம ஊராட்சிகளில் 1,087 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தினைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில் 40.87 கோடி மனிதசக்தி நாட்கள், 13,392 கோடி ரூபாய் செலவினத்தில் எய்தப்பட்டுள்ளது. ஆனால், 2024-25 ஆம் ஆண்டில் 27-11-2024 முதல் 11-03-2025 வரை வேலைசெய்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 2,839 கோடி ரூபாய் ஊதியம் மற்றும் 957 கோடி ரூபாய் பொருட்கூறுக்கான நிதி என மொத்தம் 3,796 கோடி ரூபாயை ஒன்றிய அரசு இதுவரை விடுவிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இந்த நிலுவைத் தொகையை உடனே விடுவித்திட தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 29,465 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். 100 days of work Central government due
