கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக 10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ரத்தினம்பிள்ளை வயது மூப்பு காரணமாக இன்று (ஜூன் 7) காலமானார். அவரது மறைவுச் செய்தி தஞ்சைப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சீனிவாச புரத்தைச் சேர்ந்தவர் ரத்தினம் பிள்ளை. மருத்துவம் படித்த இவர் தனது சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் 1957 ஆம் ஆண்டு முதல் மருத்துவ பணியை தொடங்கினார். 10 rupees doctor rathinampillai died
முதலில் தன் பணியை தொடங்கும் போது இவர் சிகிச்சை கட்டணமாக 2 ரூபாய் பெற்றுள்ளார். அதன்பின் 1997 ஆம் ஆண்டிலிருந்து 5 ரூபாய் கட்டணம் வாங்கி வந்தார். பின் 2007 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 10 ரூபாய் கட்டணமாக பெற்று வந்தார்.
மேலும் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரசவங்களையும் வெற்றிகரமாக குறைந்த செலவில் பார்த்துள்ளார்.
இப்படி கடந்த 65 வருடங்களாக மனிதநேயத்துடன் மிக மிக குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வரும் அவரை ’அதிசய டாக்டர்’ என்றே பொதுமக்கள் அன்போடு அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது 96 வயதான அவர் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.
அவரது மறைவு செய்தி அந்த பகுதியில் இருப்பவர்களை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி உருக்கமுடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.