உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்வது அவசியம் என்று திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்ற 5 நீதிபதி அமர்வில் 3 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
இந்த தீர்ப்பு குறித்து திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “உயர்ஜாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு செல்லும் என்று இன்று (7.11.2022) ஓய்வுபெறும் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் உள்ள அரசியல் அமர்வு அளித்துள்ள 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் செல்லும் என்ற பெரும்பான்மைத் தீர்ப்பு என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமான சமூகநீதித் தத்துவத்திற்கு நேர் முரணானது.
இந்தப் பொருளாதார அடிப்படையில் அது செல்லாது என்ற மண்டல குழு தொடர்பான 9 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிலிருந்து தப்பிக்கவே 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. இது அடிக்கட்டுமானத்திற்கு விரோதமானதாகும்.
ஒடுக்கப்பட்ட பசியேப்பக்காரனை வெளியே தள்ளி, புளியேப்பக்காரனான முன்னேறிய ஜாதி ஏழைகளை உள்ளே விருந்துக்கு அனுப்பும் சமூக அநீதியாகும்.
இதனை நியாயப்படுத்திட எந்தப் புள்ளி விவரமும், ஆதாரமும் கிடையாது.
இதன்மீது சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படவேண்டியது அவசியம், அவசரம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
ஆன்லைன் கடன் செயலி வழக்கு: ரிசர்வ் வங்கிக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜர் – அரசு நிகழ்ச்சிகள்: அமைச்சர் பொன்முடியின் பலே பிளான்