நாளை நடைபெறும் எங்களது போராட்டத்தால் சென்னையே குலுங்கும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும், தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரியும் வரும் டிசம்பர் 12, 2025 அன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 11) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளைக்கு நடைபெற உள்ள இந்தப் போராட்டமானது சென்னையை ஒரு குலுங்கு குலுங்க வைக்கும். மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கும்.
இந்த அமைதி வழிப் போராட்டத்தின் மூலம் அரசுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கும் போது முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்.
இல்லையென்றால், சிறைக்குப் போகிற மாதிரி வேறு மாதிரி போராட்டம் செய்வோம். ஆனால், அதெல்லாம் தேவையில்லை, நீங்கள் அமைதியாகவே பண்ணுங்கள், நான் இங்கேயே கொடுத்துவிடுகிறேன் என்று தமிழக முதல்வர் ஆணையிடுவார் என்றும் எதிர்பார்க்கிறேன்” என கூறினார்.
அப்போது செய்தியாளர்கள் நான்கரை ஆண்டுகள் கொடுக்கவில்லை… இப்போது கொடுத்துவிடுவார்களா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு ராமதாஸ் “சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருப்பதால், அதன் காரணமாகவே எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படலாம். நாளையப் போராட்டம் மாநிலத்தின் அனைத்து 38 மாவட்டங்களிலும் பெரிய அளவில், நடைபெறும்” என்று பதிலளித்தார்.
தைலாபுரத்தை திமுக டேக்ஓவர் செய்துவிட்டது என்று அன்புமணி கூறியது தொடர்பாகவும், சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனு கேட்டு அறிவிப்பு வெளியிட்டது தொடர்பாகவும் ராமதாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர் சிரித்துவிட்டு, பதிலளிக்கவில்லை.
