பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி: அமைச்சர் விளக்கம்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பெட்ரோல் விலை 100ஐ கடந்து விற்பனை ஆகிறது. பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி விவசாயிகள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே திமுக தனது வாக்குறுதியில் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. எனவே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக சென்னை அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை மூன்று முறை உயர்த்தியது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 10 ரூபாய் 20 காசாக இருந்த வரியை 32 ரூபாய் 90 காசாக உயர்த்தியுள்ளது. இதில், 31 ரூபாய் 50 காசுகளை மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. இதன் மூலம் தமிழகத்துக்கு 336 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு பெட்ரோல் டீசல் மூலம் 63 சதவிகிதம் வரை வருவாய் அதிகரித்துள்ளது. மாநிலங்களுக்குப் பகிர்ந்து கொடுக்க வேண்டிய வரி நிதியை மத்திய அரசு முறையாக வழங்கவில்லை.

தமிழர் ஒருவர் ஒரு ரூபாய் வரி செலுத்தினால் அதில் 4 பைசா தான் தமிழகத்திற்குக் கிடைக்கிறது.

ஒரு காலத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 112 டாலராக இருந்த போது பெட்ரோல் விலை 69ரூபாயாகத் தான் இருந்தது. தற்போது, ஒரு பீப்பாய் 40 டாலராக இருக்கும் போது பெட்ரோல் விலை 98 ரூபாயாக உள்ளது. 2011ல் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 111 டாலராக இருந்த போது , 49 ரூபாயாகத்தான் இருந்தது.

மற்ற மாநிலங்களை விட தற்போது தமிழகத்தில் தான் வரி குறைவாக உள்ளது. 2006, 2008, 2011 என மூன்று முறை வாட் வரியைக் கலைஞர் குறைத்தார். ஆனால் கடந்த அதிமுக ஆட்சி, பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை அதிகரித்தது. அப்போது இவ்வாறு வரியை உயர்த்தினால் விலை 100 ரூபாயை எட்டி விடும் என எச்சரித்தேன் . அது இன்று உண்மையாகிவிட்டது.

தற்போது 98 ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல் விலையில் 70 ரூபாய் ஒன்றிய அரசுக்கும் உற்பத்திச் செலவுக்கும் செல்கிறது. தமிழகத்துக்கு 20 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. தற்போது வரியைக் குறைப்பது ஒன்றிய அரசின் கூடுதல் வரி விதிப்புக்கு ஆதரவாக மாறிவிடும்.

மாநிலத்தின் நிதி உரிமையைப் பறித்து, இதுவரை வரலாறு காணாத அளவுக்குத் தீவிரமான சென்ட்ரலைசேஷன் என்ற அளவுக்கு, அதாவது நாங்கள் தான் எல்லாமே என்ற அளவில் ஒன்றிய அரசு செயல்படுகிறது.

எனவே தற்போதைய நிதி நெருக்கடியான சூழ்நிலையில் வாட் வரியைக் குறைக்க முடியவில்லை. குறிப்பிட்ட தேதிக்குள் வரியைக் குறைப்பதாக வாக்குறுதி எதுவும் கொடுக்கவில்லை. இன்னும் ஐந்து ஆண்டுகள் உள்ளது. எந்த அளவிற்குக் குறைக்க முடியுமோ அதைச் செய்வோம் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share