வைகோ பெண்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் – திராவிடர் விடுதலைக் கழகம்

Published On:

| By Balaji

கடந்த வியாழன் அன்று வைகோ அளித்த பேட்டியில், கருணாநிதியை சாதி ரீதியாக விமர்சித்திருந்தார். இதற்காக வைகோ மிகக் கடுமையான எதிவினைகளைச் சந்தித்த பின்னர் பகிரங்க மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து திராவிடர் கழகம் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில், ‘கலைஞர் குறித்து வைகோவின் பேட்டியை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, சென்னையில் அளித்தபேட்டியில் தி.மு.க. தலைவர் கலைஞர் பற்றி, அவர்பிறந்த சாதியை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி வெளியிட்ட கருத்தை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. அவர்வெளியிட்ட கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளித்தன. ‘வாழ்நாளில் செய்த பெரிய குற்றம், மன்னிப்புக் கோருகிறேன்’ என்று வைகோ உடனடியாக வருத்தம் தெரிவித்ததை ஒரு நல்ல முன்மாதிரியாகக் கருதி வரவேற்றாலும், அடிமனதில் ஆழமாக ஊறியிருக்கும் உணர்வுகள்தான் ஆவேசம் கொள்ளும்போது, இயல்பாகவே வெளிவரும் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். மனிதகுலத்தின் மிகப் பழமையான தொழில் என்று ‘பாலியல் தொழில்’ செய்வோரைச்சுட்டி, வைகோ இழிவாகப் பேசியதற்காக கலைஞரிடம் மன்னிப்புக் கேட்டதைப்போல், பெண்களிடமும் அவர் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும் என்பதே நமது கருத்து. 1929ம் ஆண்டு செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாட்டை நடத்திய பெரியார், மாநாட்டுக்கு மக்களை அழைத்தபோது, ‘தனிப்பட்ட ஸ்திரீகளும் தங்களை விதவைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக்கொண்டவர்களும் அவசியம் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்’ என்று ‘குடியரசு’ ஏடு வழியாக அழைத்தார். அத்தகையத் தலைவரின் லட்சியங்களை ஏற்று செயல்பட்டுவரும் இயக்கம் திராவிடர் விடுதலைக் கழகம், பெண்களையும் – ஜாதியைச் சுட்டியும் இழிவுபடுத்தும் இதுபோன்ற கருத்துகளை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share