தனியார் கட்டுப்பாட்டில் யானைகள்: மறுவாழ்வு மையத்துக்கு அனுப்ப உத்தரவு!

Published On:

| By Balaji

தனியார் கட்டுப்பாட்டில் இருக்கும் காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான மூன்று பெண் யானைகளை திருச்சி மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஞ்சி காமகோடி பீடத்திற்கு சொந்தமாக சந்தியா, ஜெயந்தி, இந்துமதி ஆகிய 3 பெண் யானைகள் உள்ளது. இந்நிலையில் பவுண்டேஷன் இந்தியா என்ற அமைப்பும், வனவிலங்குகள் மீட்பு மற்றும் மறு வாழ்வு கட்டளை என்ற அமைப்பும் 2016 ஆம் ஆண்டு முதல் இந்த 3 யானைகளையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த சூழலில் யானைகளை இந்த தனியார் அமைப்புகள் முறையாக பராமரிக்க வில்லை என விலங்கு நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில் விழுப்புரம் மாவட்டம் குறும்பரம் கிராமத்தில் வனத்துறை அனுமதி இல்லாமல் இந்த அமைப்புகள் சட்டவிரோத யானைகள் முகாமை நடத்தி வருவதாகவும் யானைகளை காட்டி வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் நன்கொடை பெறுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த யானைகள் முகாமை மூட உத்தரவிடவும் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த மனு இன்று (செப்டம்பர் 19) நீதிபதி சத்தியநாராயணன். நீதிபதி சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சந்தியா, ஜெயந்தி, இந்துமதி ஆகிய மூன்று யானைகளையும் திருச்சி எம்ஆர் பாளையத்தில் உள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் நான்கு வாரங்களில் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share