அதிமுக ஆட்சிக் காலத்தில் திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.17.73 கோடி ஊழல் நடைபெற்றது தொடர்பாக முன்னாள் ஆணையர் உட்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் 2015- 18-ம் ஆண்டு காலத்தில் குடிநீர் வடிகால் நிதி, பொது நிதி மற்றும் தொடக்க கல்வி நிதி ஆகியவற்றில் ரூ17.73 கோடிக்கு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என்பது உள்ளாட்சி தணிக்கை உதவி இயக்குநர் நடத்திய ஆய்வின் முடிவு.
- திண்டுக்கல் மாநகராட்சியின் 1, 12 வார்டுகளில் சொத்து வரி குறைவாக மதிப்பீடு செய்தன் மூலம் ரூ18 லட்சம் வருவாய் இழப்பு
- மாநகராட்சிக்கு குப்பைத் தொட்டிகள் வாங்கியதில் ரூ 24.52 லட்சம் முறைகேடு உள்ளிட்ட ரூ17.73 கோடி ஊழல் தொடர்பாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- திண்டுக்கல் மாநகராட்சியில் ஒரு குப்பைத் தொட்டி ரூ19,834-க்கு வாங்கி இருக்க வேண்டும்; ஆனால் ஒரு குப்பைத் தொட்டி ரூ37,750-க்கு வாங்கப்பட்டுள்ளது என்பதும் குற்றச்சாட்டு.
இந்த முறைகேடுகள் தொடர்பாக திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் ஆணையர் மனோகரன், உதவி வருவாய் அலுவலர் சாரங்க சரவணன், ஓய்வு பெற்ற செயற் பொறியாளர் கணேசன், முன்னாள் உதவிப் பொறியாளர் மாரியப்பன், உதவி பொறியாளர் சாமிநாதன், சுசி இன்டஸ்ட்ரீஸ் நிறுவன உரிமையாளர் நடராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் பலநூறு கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு மிகப் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி ஊழல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
