இந்தியாவில், கடந்த 2015ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக நூறு நகரங்களைத் தேர்ந்தெடுத்து அதில் சுகாதார வசதிகள், வீடுகட்டித் தருதல், நீர் வழங்கல், கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்ட சில திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறினர். இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி இன்று புனே சென்ற பிரதமர் மோடி, முதல் 20 நகரங்களுக்கான 82 திட்டங்களைத் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டங்களின் மதிப்பு ரூ.1,770 கோடி ஆகும்.
இதில், டெல்லி என்எம்டிசி பகுதியில் உள்ள 444 ஸ்மார்ட் வகுப்புகளும் அடக்கம். இந்த வகுப்பறைகளில் சிசிடிவி கேமரா, எல்இடி டிவி, மற்றும் வைஃபை சேவை போன்றவை வழங்கப்படும். இதேபோல உதய்ப்பூர், ஜெய்ப்பூர் மற்றும் காக்கிநாடாவில் கூரைமூலம் சூரிய மின்சக்தித் திட்டம் ஆகியவை தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் 20 நகரங்களைச் சேர்ந்த மேயர்கள் உட்பட சில அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
