விபத்துகளை குறைக்கும் வகையில் ஒட்டுநர்களுக்கு வசதியாக, அரசுப் பேருந்துகளின் முன்பக்கத்தில் இருபுறமும் பக்கவாட்டில் பெரிய அளவு கண்ணாடிகளைப் பொருத்த தமிழக போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் சாலையின் இருபுறமும் பேருந்து அருகே வரும் வாகனங்களை எளிதில் கண்டறிய தற்போது பக்கவாட்டில் உள்ள சிறிய ரக கண்ணாடிகள் (குவி, குழி ஆடி) போதுமானதாக இல்லை. இதனால், இருசக்கர வாகனங்கள், சிறிய ரக சரக்கு போக்குவரத்து வாகனங்கள் பேருந்தின் அருகே மிக நெருக்கமாக வருவதை அறிய முடியாமல் விபத்துக்களை சந்திக்கும் சூழல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனை தடுக்கும் வகையில், ஓட்டுநருக்கு வசதியாக பேருந்துகளில் பெரிய அளவு கண்ணாடிகளை இருபுறமும் பொருத்த போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து மாநில போக்குவரத்துத் துறை செயலர் பிடபுள்யுசி டேவிதார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது; “மாநிலத்தில் உள்ள 20000க்கும் மேற்பட்ட அரசுப்பேருந்துகளின் முன்பக்கத்தில் உள்ள சிறிய ரக பக்கவாட்டு கண்ணாடிகளை மாற்றி, பெரிய வகையிலான கண்ணாடிகளை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தகண்ணாடிகள், பின்புறத்திலிருந்து பேருந்தை முந்திச் செல்லும் வாகனத்தை கண்டறியவும், சாலையின் இருபுறமும் வரும் அனைத்து வகை வாகனங்களையும், பேருந்துஓட்டுநர்கள் கவனத்தில் கொள்ளவும் உதவியாக இருக்கும்” என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
