வங்கிக் கொள்ளை : முக்கிய குற்றவாளி சரண்!

Published On:

| By Kalai

சென்னையில் பட்டப்பகலில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான வங்கி ஊழியர் முருகனை போலீஸ் கைது செய்தது.

அரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பெடரல் வங்கியின் தங்கநகைக் கடன் பிரிவான ஃபெட் வங்கியில் ஆகஸ்ட் 13ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் முகமூடி அணிந்த 4 நபர்கள் நுழைந்து 32 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

ADVERTISEMENT

பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த முகமூடிக் கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.  

வங்கி  மேலாளர் அளித்த புகாரின் பேரில் கூடுதல் காவல் ஆணையாளர் அன்பு தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. சுற்று வட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு கொள்ளையர்கள் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதில் எம்எம்டிஏ அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சிலர் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் வங்கியின் ஊழியரே கொள்ளையில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகிய 3 பேரை போலீஸ் கைது செய்தது. கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான வங்கி ஊழியர் முருகனை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் திருமங்கலம் காவல்நிலையத்தில் இன்று சரணடைந்துள்ளார்.

ADVERTISEMENT

அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற 32 கிலோ தங்க நகையில் 18 கிலோ நகையை போலீசார் பறிமுதல் செய்து இருக்கின்றனர். 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கலை.ரா

பெரியார் சிலை குறித்து அவதூறு : ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share