வங்கிகளில் இதுவரை இருந்த பணத்தட்டுப்பாடு நிலைமை மாறி, சிறிதுசிறிதாக பழைய நிலை திரும்பும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
நாட்டில் கறுப்புப் பணப்புழக்கத்தை ஒழித்துக்கட்டும் விதமாக, கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி நள்ளிரவு முதல் உயர்மதிப்பு நோட்டுகளான ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அறிவித்த பிரதமர் மோடி இந்நோட்டுகளை வங்கிகளில் செலுத்துவதற்கான காலக்கெடுவை டிசம்பர் 30 வரை நிர்ணயித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து மதிப்பிழந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்த மக்கள் தினமும் அணிவகுத்து கொண்டிருந்தனர். இந்நோட்டுகளுக்கு மாற்றாக ரூ.100நோட்டுகளும் புதிய வடிவிலான ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளும் மக்களுக்கு வங்கிகள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அறிவிப்பு வெளியாகி இரண்டு மாதங்கள் நிறைவடையும் நிலையில் வங்கிகளில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இதுபற்றிப் பேசுகையில், ‘வங்கிகளில் இருந்துவந்த பணத்தட்டுப்பாடு குறைந்து, நிலைமை விரைவில் சீரடையும். ஏழை மக்களுக்கென தனி திட்டங்களை வங்கிகள் அமைத்துத்தர துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வங்கிகளில் தற்போது புதிய ருபாய் நோட்டுகள் போதுமான அளவிற்கு வந்துள்ளன.
எனவே நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு நிறைய கடன் மற்றும் சலுகைகள் வழங்க இது வாய்ப்பளிக்கும். இதுவரை ரூ.12.5 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் டெபொசிட் செய்யப்பட்டுள்ளன’ என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து வங்கி ஊழியர்களுக்கும், குறிப்பாக கிராம எல்லைகளில் பணிபுரிந்த வங்கி ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
