ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க கடந்த ஆண்டு ஐசிசி அனுமதி வழங்கியது.
ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் அணிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கான அங்கீகாரத்தை ஐசிசி வழங்கும். அதேபோல் டெஸ்ட் போட்டிகளை விளையாட சில நிபந்தனைகள் உள்ளன. அதில் தேர்ச்சி பெற்ற பின்னரே அந்த அணிகள் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியும். அதன்படி ஆப்கானிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் இனி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கலாம் என ஐசிசி கடந்த ஆண்டு அறிவித்தது.
அதன் தொடர்ச்சியாக இந்தியாவுடனான முதல் போட்டியை இருநாட்டு கிரிக்கெட் நிர்வாகமும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் (ஜனவரி 16) பிசிசிஐ வெளியிட்ட தகவலின்படி வருகிற ஜூன் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை ஆப்கானிஸ்தான் அணியுடன் இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.
அதேபோல் அயர்லாந்து அணியுடன் பாகிஸ்தான் அணி முதல் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கும் இரு அணிகளும் பலம் வாய்ந்த இரண்டு அணிகளை எதிர்கொள்ளவிருப்பதால் போட்டி சுவாரஸ்யமானதாக இருக்கும்.
