மிக்ஜாம் புயல் காரணமாக இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 4) ஒருநாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில்கள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மிக்ஜாம் (MICHAUNG) புயல் காரணமாக தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்ததை தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை நேர அட்டவணையின் படி இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மெட்ரோ ரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புயல் மற்றும் கனமழையின் காரணமாக இன்று (டிசம்பர் 4) தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம். அவசிய தேவை உள்ளவர்கள் மட்டும் பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக் கொள்கிறது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
