மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மானிய ஸ்கூட்டர் திட்டத்தின் கீழ் மகளிர் வாங்கும் வாகனத் தொகையில் ரூ.25 ஆயிரம் அல்லது 50 சதவிகித மானியத் தொகை இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை வழங்கப்படும். இந்தத் திட்டம் வரும் பிப்ரவரி 24 முதல் தொடங்கப்படவுள்ளது. இதற்காக 3,36,103 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 1 லட்சம் பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இத்திட்டத்தைத் தொடங்க வரும் 24 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இத்திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் ”இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்களுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது. அதற்கு ஆண்டுக்கு ரூ.250 கோடி நிதி தேவைப்படும். இது தவிர மானிய ஸ்கூட்டர் திட்டத்தில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். அதாவது ஏற்கனவே ஸ்கூட்டி வைத்திருப்பவர்கள் மீண்டும் இருசக்கர வாகனம் பெறுவதைத் தவிர்க்க வழிவகையில்லை.
ரூ.50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை கொடுத்து இருசக்கர வாகனம் வாங்குபவர்கள் பொருளாதார ரீதியாக வலுவான நிலையில் இருப்பவர்கள். அவர்களுக்கு மானிய ஸ்கூட்டர் வழங்க வேண்டிய அவசியமில்லை.
திமுக ஆட்சியின்போது இலவச டிவி வழங்கவும், இலவச கியாஸ் அடுப்பு மற்றும் கியாஸ் இணைப்பு வழங்கவும் பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இதையடுத்து அதிமுக ஆட்சியில் கிரைண்டர், மிக்சி என கோடி கணக்கில் செலவிடப்பட்டது.
தொடர்ச்சியாக இலவசத் திட்டம் வழங்கப்படுவதால் தமிழக அரசில் நிதிப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. எனவே பற்றாக்குறை நீங்கும் வரை மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.�,