மதுரையில் வாக்குப் பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள மையத்தில் பெண் அதிகாரி அத்துமீறி நுழைந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தக் கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சில அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு அறைக்குள் கடந்த 20ஆம் தேதி நுழைந்த பெண் தாசில்தார் சம்பூரணமும் அவரது ஆட்களும் அங்கு மூன்று மணி நேரம் செலவிட்டதாகவும், வெளியே வரும்போது சில ஆவணங்களை எடுத்து வந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து தாசில்தார் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெங்கடேசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 26) அவசர முறையீடு செய்தார்.அதில், “வாக்கு பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள், ஆவணங்கள் அனைத்தும் மதுரை மருத்துவக் கல்லூரியில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெண் தாசில்தார் ஒருவர் அத்துமீறி தேர்தல் தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்துள்ளார். இது தொடர்பாக முறையான விசாரணை நடைபெறவில்லை. எனவே உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் அளித்தனர்.
