அமீர் இயக்கி வரும் சந்தனதேவன் திரைப்படம் ஜல்லிக்கட்டை மையமாக கொண்ட கதை. இதில் ஆர்யா, அமீர், சத்யா, அதிதிமேனன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறிய அதிதி மேனன்‘சந்தனதேவன் படத்தில் சத்யா ஜோடியாக நடிக்கிறேன். நிஜ வாழ்க்கையில் பாவாடை தாவணி கட்டாத நான் இந்த படத்தில் முழுக்க முழுக்க பாவாடை தாவணி அணிந்து நடிக்கிறேன். மதுரை பெண் போல நான் இருக்க வேண்டும் என்று அமீர் சார் என்னை மதுரை பெண்களுடன் பழக வைத்தார். அவர்கள் நடை, உடை, பாவனையை உள்வாங்கி நடித்தேன். என்னை இந்த படம் மூலம் மதுரை பெண்ணாகவே மாற்றி விட்டார். காதல் செய்யும் நாயகியாக இல்லாமல் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தும் வேடத்தில் நடிக்கிறேன். இன்னும் இரண்டு வாரங்களில் எனது தொடர்பான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிடும்.
சந்தனதேவன் படத்தில் என் நடிப்பை பார்ப்பவர்கள் என்னை நம்பி இனி எந்த வேடமும் தருவார்கள். அந்த அளவு வெயிட்டான வேடத்தை அமீர் சார் எனக்கு தந்திருக்கிறார். இந்த படத்தை நடித்து முடிந்த பிறகுதான் அடுத்த படங்களில் நடிக்க வரும் அழைப்பை ஏற்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.
